மதுரை, தஞ்சையில் கனமழை... சென்னையில் சாரல் மழை
சென்னை புறநகரில் சாரல் மழை பெய்து வரும் நிலையில், மதுரை, தஞ்சையில் கனமழை கொட்டியது.
சென்னை: சென்னை மற்றும் புறநகரில் சாரல் மழை பெய்து வரும் நிலையில், மதுரை, தஞ்சையில் கனமழை கொட்டியது.
தமிழகம், புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்த நிலையில் தமிழகத்தில் உள் மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது.
மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கோரிப்பாளையம், மாட்டுத்தாவணி உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்து வருகிறது. மாலை 5 மணி முதல் பெய்து வரும் கனமழையால் மின்சாரம் தடைபட்டுள்ளது
திருப்பரங்குன்றம், திருநகர், பெருங்குடி உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை கொட்டியதால் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. சாலைகளில் வெள்ளம் பெருகியுள்ளதால் காளவாசல் பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் பல ஊர்களில் கனமழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சென்னையில் பல பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது மயிலாப்பூர், மந்தைவெளி, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
சென்னை புறநகர் பகுதிகளான ஆவடி, பட்டாபிராம், திருமுல்லைவாயில் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. திருவள்ளூருரில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. இந்த நிலையில் இன்று பரவலாக மழை பெய்து வருகிறது.