பெண் வக்கீல்கள் பற்றி சமூக வலைதளங்களில் ஆட்சேபனை கருத்துகள் கூடாது.. வக்கீல்களுக்கு ஐகோர்ட் தடை
சென்னை: நீதித்துறை பற்றியும், நீதித்துறையுடன் சம்பந்தப்பட்டவர்களை பற்றியும், குறிப்பாக பெண் வழக்கறிஞர்களை பற்றியும் வாட்ஸ்அப், யூடியூப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை வெளியிட வழக்கறிஞர்கள் இருவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சுதா ராமலிங்கம், அன்னா மேத்யூ உள்பட 6 பெண் வழக்கறிஞர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது,
நீதித்துறையை பற்றியும், பெண் வழக்கறிஞர்களை பற்றியும் ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை முகநூல், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகவலைதளத்தில் வழக்கறிஞர்கள்
பீட்டர் ரமேஷ்குமார், மணிகண்டன் ஆகியோர் வெளியிட்டுள்ளனர். சமூக வலைதளங்களில் ஆட்சேபனைக்குரிய கருத்துகளை தெரிவிக்க அவர்களுக்கு தடை விதிக்க
வேண்டும். அவர்கள் ஏற்கனவே தெரிவித்த ஆட்சேபனைக்குரிய கருத்துகளை நீக்க உத்தரவிட வேண்டும் என்று அவர்கள் அதில் தெரிவித்துள்ளனர்.
அந்த மனு நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியம், கே.ரவிசந்திரபாபு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அவர்கள் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது,
நீதித்துறை பற்றியும், நீதித்துறையுடன் சம்பந்தப்பட்டவர்களை பற்றியும், குறிப்பாக பெண் வழக்கறிஞர்களை பற்றியும் வாட்ஸ்அப், யூடியூப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை வெளியிட வழக்கறிஞர்கள் பீட்டர் ரமேஷ்குமார், மணிகண்டன் ஆகியோருக்கு தடை விதிக்கப்படுகிறது.
இவர்கள் முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் வெளியிட்ட ஆட்சேபனை கருத்துக்களை அகற்ற முகநூல், யூடியூப் உள்ளிட்ட நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக அந்நிறுவனங்களுக்கு சென்னை சைபர் கிரைம் துணை போலீஸ் கமிஷனர் உதவிகளை செய்ய வேண்டும் என்று அவர்கள் அதில் தெரிவித்துள்ளனர்.