நீட் அச்சம்.. 10 வருடங்களாக பாடத்திட்டத்தை மாற்றாதது ஏன்? தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி
கடந்த 10 ஆண்டுகளாக பாடத்திட்டத்தை மாற்றி அமைக்காதது ஏன் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை: கற்பிக்கும் முறையையும், பாடத்திட்டத்தையும் மாற்றி அமைக்காதது ஏன் என்று தமிழக அரசை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இன்று தரவரிசை பட்டியலை தமிழக அரசு வெளியிட்டது.
இந்நிலையில் நாமக்கல்லை சேர்ந்த மாணவி, கிருத்திகா என்பவர், மாநில பாடத் திட்டத்தில் பயின்று நல்ல மதிப்பெண் பெற்றார். ஆனால் நீட் தேர்வில் அவரால் மருத்துவ படிப்பில் சேர முடியவில்லை.
எனவே தற்போது நடைபெறும் கலந்தாய்வில் தன்னை இணைத்துக் கொள்ள உத்தரவிடக் கோரி ஹைகோர்டடில் வழக்கு தொடர்ந்தார். இன்று வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், நீட் தேர்வு விஷயத்தில் மாணவர்களுக்கு தமிழக அரசு அநீதி இழைத்துவிட்டதாக தெரிவித்தார். மாநில பாடத் திட்டம் மற்றும் சிபிஎஸ்இ பாடப் பிரிவுகளில் பயின்ற மாணவர்கள் பட்டியலை மதியம் 2.30 மணிக்குள் ஹைகோர்ட்டில் தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டார்.
அப்போது நீதிபதி கிருபாகரன் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளாக பாடத்திட்டத்தை மாற்றி அமைக்காதது ஏன்? கற்பிக்கும் முறையையும் மாற்றி அமைக்காதது ஏன்?
சிபிஎஸ்இ அமைப்பை தேர்வு நடத்தும் நிறுவனமாகவும், வினாத்தாள் தயாரிக்கும் உரிமையும் வழங்கியது யார். அவர்கள் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு சாதகமாகத்தானே நடந்து கொள்வர். சிபிஎஸ்இ தரத்திலான கேள்விகளை எப்படி மாநில பாடப்பிரிவு மாணவர்களால் எதிர்கொள்ள முடியும்.
மாணவர்கள், பெற்றோர் பாதிப்பிற்கு முழு காரணம் மாநில பாடத்திட்டமே. 10 வருடங்களாக பாடத்திட்டத்தை தமிழக அரசு மாற்றவில்லை என்றார் அவர். இறுதியாக நீட் விவகாரத்தில் தன்னால் இயன்ற முயற்சிகளை செய்த தமிழக அரசுக்கும், குரல் கொடுத்த அனைத்து கட்சிகளுக்கும் பாராட்டுகளை நீதிபதி தெரிவித்தார்.