துணைவேந்தர்கள் நியமன வழக்கு: தமிழக ஆளுநரின் செயலருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்!
பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் குறித்து 2 வாரத்தில் பதிலளிக்குமாறு தமிழக ஆளுநரின் செயலருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை : தமிழகத்தில் பல்கலைக் கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தர் பணியிடங்களை நிரப்பக் கோரிய வழக்கில் பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் ஆளுநர் செயலர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக் கழகம், சென்னை பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர், பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பணியிடமும், அண்ணா பல்கலைக்கழகம், தமிழ் நாடு மீன்வள பல்கலைக் கழகத்தில் துணைவேந்தர் பணி யிடமும், தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகம், பாரதி யார் பல்கலைக்கழகத்தில் பதிவாளர் பணியிடங்களும், திருவள்ள வர் பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகங்களில் பதிவாளர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பணியிடமும், அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தில் டீன் பணியிடமும் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளன.
இதனால் பல்கலைக்கழக நிர்வாகம் ஸ்தம்பித்துள்ள நிலையில் தமிழகத்திலுள்ள பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணை வேந்தர், பதிவாளர், தேர்வு கட்டுப் பாட்டு அலுவலர், டீன் பணியிடங்களை உடனடியாக நிரப்ப உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட் நீதிபதிகள் இந்த வழக்கில் துணைவேந்தர்கள் நியமனம் குறித்து 2 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று ஆளுநர் செயலருக்கு உத்தரவிட்டுள்ளது. இதே போன்று தமிழக அரசு மற்றும் பல்கலைக்கழக மானியக்குழுவும் இது குறித்து பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.