டாஸ்மாக்குக்கு எதிராக போராடுபவர்கள் விஷமிகளா? - ஹைகோர்ட்டு குட்டு!
டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடுபவர்கள் விஷமிகளா என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடுபவர்கள் விஷமிகளா என்று சென்னை உயர்நீதிமன்றம் அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.
மே மாதம் முதல் வாரத்தில் திருமுல்லைவாயில் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியினரின் போராட்டம் நடைபெற்றது. இந்த வழக்கில் தொடர்புடைய ஒருவரின் தாயார் இறந்துவிட அவரை பரோலில் வெளியே அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் சிறைத்துறை அவரை வெளியில் அனுப்பாததால் வழக்கு பதிவு செய்யப்பட்ட அனைவர் மீதான முதல் தகவல் அறிக்கையும் ரத்து செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட நாம்தமிழர் கட்சியின் 21 பேரை விடுவிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் நீதித்துறையின் உத்தரவை சிறைத்துறை பின்பற்றுவதில் உள்ள குளறுபடிகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிடப்பட்டிருந்தது.
விஷமிகளா?
அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது டாஸ்மாக்கிற்கு எதிராக போராடுபவர்களை ஊடகங்கள் தவறாக சித்தரிக்கின்றன. காவல்துறை வழக்கமாக நடந்து கொள்வதை அதிகமாக சித்தரித்து காட்டுவதாகவும் அரசு தரப்பில் கூறப்பட்டது. அரசு தரப்பின் இந்த பதிலால் அதிர்ச்சியடைந்த நீதிபதி கிருபாகரன், பார்த்திபன் அமர்வு, பெண்களும், குழந்தைகளும் போராடுகிறார்கள் அவர்களை எப்படி விஷமிகள் என்று சொல்கிறீர்கள் என கேள்வி எழுப்பினர்.
எல்லை உண்டு
பெண்களும், குழந்தைகளும் போராடுவதை மீடியாவில் நேரடியாக பார்க்கிறோம் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், பார்த்திபன் அமர்வு கேள்வி எழுப்பியுள்ளனர். டாஸ்மாக்கிற்கு எதிராக போராடுபவர்கள் மீது குற்றம் சுமத்த ஒரு எல்லை உண்டு என்று அவர்கள் கூறியுள்ளனர்.
தவறான தகவல் தர வேண்டாம்
காவல்துறை பாதுகாப்புடன் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகின்றன. அந்தக் கடைகளுக்கு எதிராகத் தான் பெண்கள் போராடுகிறார்கள். மது பழக்கத்தால் தங்கள் குடும்பம் பாதிக்கப்படுவதால் தானே அவர்கள் போராடுகிறார். நாங்களும் இந்த சமூகத்தில் தான் இருக்கிறோம், தவறான தகவல்களை எங்களுக்கு தெரிவிக்க வேண்டாம் என்று நீதிபதி கிருபாகரன் கூறினார்.
மக்களுக்கு பாதுகாப்பில்லை
டாஸ்மாக் கடைகளுக்கு பாதுகாப்பு கொடுக்காமல் போராட வரும் மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதே போலீசாரின் கடமை. டாஸ்மாக் கடை நடத்துவது அதிமுக, திமுக கட்சியை சேர்ந்தவர்களே என்பதால் எல்லா ஆட்சியிலும் பணம் சம்பாதிப்பது மட்டுமே நோக்கமாக இருக்கிறது என்று நீதிபதிகள் அரசை வறுத்தெடுத்துவிட்டனர்.
விஐபி கைதிகளுக்கு சிறப்பு அந்தஸ்தா
மேலும் சிறையில் விஐபிகளுக்கு சிறப்பு அந்தஸ்தும், மற்ற கைதிகளுக்கு போதுமான வசதிகள் செய்யப்படுவதில்லை என்றும் குற்றம்சாட்டப்படுவது குறித்து கேள்வி எழுப்பினர். இது குறித்து விளக்கமளிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.