தனியார் பால் நிறுவனங்கள் வழக்கில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு: வீடியோ
தனியார் நிறுவனங்களின் பாலில் கலப்படம் உள்ளது என கூறிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதுகுறித்து நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: தனியார் பாலில் கலப்படம் உள்ளது என்று கூறிய பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நான்கு வாரங்களுக்குள் அதுகுறித்து பதில் அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பால்வளத்துறை அமைச்சர் பாலாஜி, தனியார் பாலில் கலப்படம் செய்யப்படுகிறது இதனை அருந்துவதால் உடலுக்கு தீங்கு ஏற்படும் என கூறினார். மேலும், கலப்படம் செய்யப்படும் நிறுவனங்களைக் கண்டுபிடித்து தண்டனை வழங்கப்படும் எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
உடனே, பால் நிறுவனங்களிடம் இருந்து கமிஷன் வாங்குவதற்குத்தான் இவ்வாறு பேசுகிறீர்கள் என எதிர்தரப்பினர் குற்றம்சாட்டுகிறார்களே என அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, 'அரசியல்வாதிகளுக்கு வேறு வேலை இல்லை' என கூறி சர்ச்சையை உண்டாக்கினார்.
இந்த நிலையில், தனியார் பால் நிறுவனங்கள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இவ்வாறு கூறியதால் விற்பனை பாதித்துள்ளது. அதனால் பல கோடி நஷ்டம் எற்பட்டுள்ளது என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.