மாணவர்களுக்கு ஷாக்.. மருத்துவ மாணவர் சேர்க்கையில் 85% உள்ஒதுக்கீடு அரசாணை ரத்து- ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: மாநில பாடத்திட்டத்தில் படித்தோருக்கான 85% உள்ஒதுக்கீட்டை ரத்து செய்துள்ளது சென்னை ஹைகோர்ட்.
நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க மத்திய அரசு மறுத்துவிட்டது. எனவே, மருத்துவபடிப்பில் மாநில பாடத்திட்டத்தில் படித்தோருக்கு 85% ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதனால் சிபிஎஸ்சி பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கூறி, தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து சிபிஎஸ்சி மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பான தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்யக்கோரினர்.
ஆனால் அந்த வழக்கை கடந்த ஜூலை 7ம்தேதி முடித்துவைத்தது உச்ச நீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது, என்றும், உயர்நீதிமன்றத்திலேயே இப்பிரச்சினைக்கு முடிவு காணும்படியும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் ஹைகோர்ட்டில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதி ரவிச்சந்திரபாபு தனது உத்தரவை பிறப்பித்தார். மாநில பாடத்திட்டத்தில் படித்தோருக்கான 85% உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். குஜராத்திலும் இதேபோல இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டு அதையும் அங்கு கோர்ட் ரத்து செய்திருந்தது.
இதனிடையே, மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு புதிய தரவரிசைப் பட்டியல் வெளியிட ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவ படிப்பு கலந்தாய்வு தாமதமாகிவரும் நிலையில், இந்த உத்தரவால் இன்னும் கூட அது தாமதமாக வாய்ப்புள்ளது.