சிறுநீரக அறுவைச் சிகிச்சை செய்த பெண்ணுக்கு டெஸ்ட் டியூப் முறையில் குழந்தைப் பேறு.. சென்னையில் சாதனை
சென்னை: இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை ஐஸ்வர்யா மருத்துவமனையில் டாக்டர் சந்திரலேகா தலைமையிலான மருத்துவர் குழு புதிய சாதனை படைத்துள்ளது.
சிறுநீரக அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட பெண்ணுக்கு சிக்கலான சோதனைக் குழாய் முறையில் குழந்தைப் பேறை ஏற்படுத்திக் கொடுத்து அந்தப் பெண்ணின் வாழ்க்கையை மலரச் செய்துள்ளார் டாக்டர் சந்திரலேகா.
கடந்த 25 ஆண்டுகளாக மகப்பேறு சிகிச்சையில் இருந்துவரும் ஐஸ்வர்யா மருத்துவமனை மாபெரும் சாதனை படைப்பது இதுவே முதல் முறை அல்ல.
10 ஆண்டுகளுக்கு முன்பே
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பே இரட்டை கருப்பையுடன் இருந்த பெண்ணுக்கு, இரண்டு ஆண் குழந்தை பெற்றெடுக்க புதிய சிகிச்சை கொடுத்து சாதனை படைத்திருக்கிறார். அதேபோன்று உறைநிலையில் இருந்த கருவணுவை எடுத்து குழந்தை உருவாக்கும் சாதனையையும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே செய்திருக்கிறார்.
லேப்ராஸ்கோப்பி மூலம் கருப்பை அகற்றம்
சமீபத்தில் 3.5 கிலோ எடையுள்ள கருப்பை கட்டியையும் பாதிக்கப்பட்ட கருப்பையையும் லேப்ராஸ்கோபி முறையிலேயே அகற்றி சாதனை படைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிக்கலான பெண்ணுக்கு
சிறுநீரகம் செயல் இழந்தவர்களுக்கு டயாலிசஸ் சிகிச்சையும் சிறுநீரக மாற்று சிகிச்சையுமே தீர்வாக இருக்கின்றன. இந்த வகையில் சிக்கலான சிறுநீரக மாற்று சிகிச்சையை மேற்கொண்ட ஒரு பெண்ணுக்கு, இந்தியாவிலேயே முதலாவதாகவும் ஆசிய அளவில் இரண்டாவதாகவும் டெஸ்ட் டியூப் பேபி முறையில் குழந்தை உருவாக்கி சாதனை படைத்திருக்கிறார், ஐஸ்வர்யா ஃபெர்டிலிட்டி மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டாக்டர் சந்திரலேகா.
32 வயதுப் பெண்
அனிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 32 வயது பெண்மணி. இவர் கடந்த ஆறு ஆண்டுகளாக கருத்தரிக்காமையினால் பாதிக்கப்பட்டிருந்தார். இவருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இவர் குழந்தைப் பேறு வேண்டி தாயாக விரும்பி, ஐஸ்வர்யா பெண்கள் மருத்துவமனை மற்றும் குழந்தைப் பேறு மையத்தின் தலைமை மருத்துவர் டாக்டர் சந்திரலேகாவினை நாடினார்.
பெர்ஜர் நோய்
திருமணம் ஆகி ஓராண்டிற்குப் பின் திடீரென ஏற்பட்ட, பெர்ஜர் நோய் என அழைக்கப்படும் சிறுநீரக நோயினால், சிறு நீரகங்களில், கழிவுகளைச் சுத்தம் செய்திடும் வடிகட்டிகள் கொஞ்சம் கொஞ்சமாக திறன் இழந்து, இவருக்குச் சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டது. இதற்குச் சிகிச்சையாக, அடிக்கடி சிறுநீரகம் வழி இரத்தத்தைச் சுத்தமாக்க டயாலிசிஸ் செயல்பாட்டினை மேற்கொண்டார். இது பலனளிக்காமல் போகவே, 2008 ஆம் ஆண்டில், சிறுநீரக மாற்று சிகிச்சை மேற்கொண்டார். இவருக்கு, இவரின் தாயார் தன்னுடைய சிறுநீரகம் ஒன்றைத் தானமாக வழங்கினார்.
கருத்தரிக்க இயலவில்லை
சிறுநீரகம் மாற்றப்பட்ட பின்னர், தானமாகப் பெற்று இணைக்கப்பட்ட சிறுநீரகம் ஏற்றுக் கொள்ளப்படாத நிலையை அடைவதைத் தடுக்க, தடுப்பாற்றலைத் முறிப்பதற்கு எதிரான சிகிச்சையில் தொடர்ந்து இருந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு அவர் கருத்தரிக்கக் கூடாது என அவருக்கு ஆலோசனை தரப்பட்டது. பின்னர், இயற்கையான முறையில் கருத்தரிக்கும் வழிகளை மேற்கொண்டார். ஆனால், அவரால் கருத்தரிக்க இயலவில்லை. அவருக்கு, ஐஸ்வர்யா பெண்கள் மருத்துவமனை மற்றும் குழந்தைப் பேறு மையம் செல்லுமாறு அறிவுரை தரப்பட்டது.
ஐ.யு.ஐ.
இந்த மருத்துவமனையில், சிறுநீரகச் செயல்பாடு மற்றும் கருத்தரிப்பிற்கான தகுதி குறித்து அவர் உடல்நிலை ஆய்வு செய்யப்பட்டது. அவர் கருத்தரிக்க வாய்ப்புள்ளது என்பதனை உறுதி செய்யப்பட்ட பின்னர், அவருக்கு இயற்கையாகக் கருத்தரிக்க சிகிச்சையும், ஐ.யு.ஐ. (Intrauterine insemination:- சுத்தமாக்கப்பட்ட விந்தணுவினை நேரடியாக கருப்பையில் செலுத்துதல்)சிகிச்சையும் ஓராண்டிற்கு, மிகக் குறைந்த பாதுகாப்பான மருந்துகளுடன் அளிக்கப்பட்டது. ஆனால், அவை வெற்றி பெறவில்லை.
நன்மைகளும், அபாயங்களும்
இறுதியாக, கணவன் மனைவி இருவரும், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளுதல் மற்றும் சோதனைக் குழாய் கருத்தரிப்பு செய்து தானே குழந்தையின் கருவினைச் சுமத்தல் ஆகிய இரண்டும் குறித்து ஆய்வு செய்தனர். பன்னாட்டளவில் இது போல, சிறுநீரக மாற்று சிகிச்சைக்குப் பின்னர், சோதனைக் குழாய் மூலம் கருத்தரிப்பதில் ஏற்படக் கூடிய அனைத்து நன்மைகளும் அபாயங்களும் ஆய்வு செய்யப்பட்டன. அவை அனைத்தும், அனிதா, அவர் கணவர் மற்றும் அவர் குடும்பத்தினருடன் கலந்து கருத்துப் பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டது.
டாக்டர் சந்திரலேகா வழிகாட்டுதலில்
பின்னர், ஐஸ்வர்யா பெண்கள் மருத்துவமனையில், டாக்டர் சந்திரலேகா அவர்களின் வழிகாட்டுதலில், அனிதா சோதனைக் குழாய் கருத்தரிப்பு சிகிச்சையினை மேற்கொண்டார். அவருடைய கரு உற்பத்தி செய்யும் சூலகம், 11 நாட்கள் தூண்டப்பட்டு, அவருடைய கரு முட்டைகள் பெறப்பட்டன. அவருடைய கணவரின் விந்தணுக்களும் பெறப்பட்டு பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டது. ஐ.சி.எஸ்.ஐ. (Intracytoplasmic sperm injection of eggs- விந்தணுக்களை நேரடியாக ஊசி மூலம் செலுத்துதல்)முறையைப் பயன்படுத்தி, செயற்கைக் கருத்தரிப்பு பரிசோதனைக் கூடத்தில், அனிதாவின் கரு முட்டைகள், இனப்பெருக்கத்திற்கு வளப்படுத்தப்பட்டன. ஒரே ஒரு ஆரோக்யமான தொடக்க நிலையிலுள்ள முட்டைக் கருவுயிர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அனிதாவின் கருப்பைக்கு மாற்றப்பட்டது. மீதமிருந்த ஆரோக்யமான கருவுயிர் முட்டைகள், குளிர்நிலை சோதனைச் சாலையில், உறைநிலையில் வைக்கப்பட்டது.
2 வாரங்களில் கர்ப்பம்
இரண்டு வாரங்களில், அனிதாவின் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கருத்தரிப்பு காலம் முழுவதும், தாய் மற்றும் கருப்பையில் வளரும் குழந்தை மருத்துவரீதியாகத் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டனர். அவருடைய சிறுநீரகத்தின் செயல்நிலையும் மிகவும் அணுக்கமான கவனத்தில் வைக்கப்பட்டது. 38 ஆவது வாரத்தில், அவருடைய சிறுநீரக நிலையில், தசைப் புரதம் சற்று அதிகமான அளவில் இருப்பது காணப்பட்டது. அதனால், அதனைத் தொடர்ந்து குழந்தை, ஐஸ்வர்யா பெண்கள் மருத்துவமனை மற்றும் குழந்தைப் பேறு மையத்தில், சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம், வெற்றிகரமாகப் பிரசவிக்கப்பட்டது. குழந்தை 3.2 கிலோ எடையில், நல்ல ஆரோக்கியத்துடன் ஆண் குழந்தையாக இருந்தது. இதனைத் தொடர்ந்து தாயும் சேயும் தொடர்ந்து மருத்துவ ரீதியாகக் கண்காணிக்கப்பட்டனர். இப்போது இருவருமே பரிபூரண நலத்துடன் உள்ளனர்.
நல்ல நலத்துடன் தாயும் சேயும்
"இந்தியாவிலேயே, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட பெண்களில் ஒருவர், செயற்கை கருத்தரிப்பு முறையில் கருவுற்று, மிகச் சிறந்த நலத்துடன், முழுமையாக தாயிடம் வளர்ந்த குழந்தையைப் பெற்றெடுப்பது, இதுவே முதல் முறை" என ஐஸ்வர்யா குழந்தைப் பேறு மைய தலைமை மருத்துவர் டாக்டர் சந்திரலேகா தெரிவித்தார். இந்த நிகழ்வு, இது போன்ற பெண்கள் தாயாக முடியும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது. இதனால், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதான தேவையைக் குறைக்கிறது. ஐந்தாண்டுகளுக்கு முன்னால், உறைநிலையில் வைக்கப்பட்ட முதிராத சூல் முட்டை மற்றும் உறைநிலையில் வைக்கப்பட்ட விந்தணு பயன்படுத்தி செயற்கைக் கருத்தரிப்பின் மூலம் முதல் குழந்தை பிறப்பிக்கச் செய்த நிகழ்வை நடத்திய சாதனையும் ஐஸ்வர்யா கருத்தரிப்பு மையத்திற்கு உண்டு. இன்னொரு அரிதான நிகழ்வில், 11 ஆண்டுகளுக்கு முன்னர், இரண்டு கருவறைகள் கொண்ட ஒரு பெண், ஐ.சி.எஸ்.ஐ. முறையில் கருத்தரிக்கப்பட்டு, இரட்டை குழந்தைகளை, இரு சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் பெற்றெடுத்தார் என்று டாக்டர் சந்திரலேகா தெரிவித்துள்ளார்.