மாமழை போற்றுதும்.. மாமழை போற்றுதும்.. வாஸ்தவம்தான்.. ஆனா வலிக்க வலிக்க அடிச்சா எப்படி வருணா??
சென்னை: மழை.. கொடை.. உண்மைதான்... ஆனால் குடையைக் கூடப் பிடித்துக் கொண்டு வெளியே போக முடியாத அளவுக்கு விடாமல் வெளுத்துக் கட்டுவதைப் பார்த்தால் சென்னைவாசிகளை வருணன ஏதோ ஒரு கோபத்தில் கடுமையாக தண்டிப்பது போலவே தெரிகிறது.
இப்படி ஒரு மழையை நினைவுக்கு தெரிந்தது முதல் பார்க்கவில்லை என்பதுதான் சென்னை மக்களின் ஏகோபித்த ஆச்சரியமாக இருக்கிறது. அந்த அளவுக்கு விடாமல் பெய்து வரும் மழையால் சகலரும் ஸ்தம்பித்துப் போயுள்ளனர்.
ஊரே கடலாக காட்சி தருகிறது. சற்று வெள்ளம் வடிந்து இயல்பு நிலைக்குத் திரும்பிய பகுதிகளும் கூட இப்போது மீண்டும் வெள்ளக்காடாகியுள்ளன. குறிப்பாக புறநகர்கள்.
கடலென காட்சி தரும் சென்னை
சென்னை நகரைப் பற்றிச் சொல்ல வேண்டாம். கான்க்ரீட் காடாகி விட்ட சென்னை நகரில் மருந்துக்குக் கூட மண் இல்லை. இதனால் வெள்ளம் போகும் வழி தெரியாமல் போகும் போக்கெல்லாம் போய்க் கொண்டிருக்கிறது.
கண் மண் தெரியாத மழை
கண் மண் தெரியாத அளவுக்கு விளாசித் தள்ளும் மழையால் மக்கள் எங்கு போவது என்ன செய்வது என்று தெரியாத அளவுக்கு குழம்பிப் போயுள்ளனர்.
வெளியில் தலை காட்ட முடியவில்லை
வெளியில் தலை காட்டவே முடியவில்லை. அப்படி ஒரு பேய் மழை பெய்து வருகிறது. புறநகர்களில் குறிப்பாக மீனம்பாக்கம் முதல் தாம்பரம், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி வரையிலும், இந்தப் பக்கம் கிழக்குத் தாம்பரம் முதல் அடை மழையாக பெய்து வருகிறது.
இப்பவே இவ்வளவு தண்ணீர் என்றால்
இப்போதே இவ்வளவு தண்ணீர் வந்து விட்டது என்றால் இரவில் எத்தனை ஏரிகளின் கரைகள் உடையுமோ, உடைக்கப்படுமோ, வீடு மூழ்கிப் போய் விடுமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.
தற்காப்பு நடவடிக்கைகள்
மழை எவ்வளவு பெய்தாலும் தாக்குப் பிடிக்கக் கூடிய அளவில் மன வலிமை பெற்று விட்ட மக்கள் இப்போதே தற்காப்பு நடவடிக்கைகளில் குதித்து விட்டனர். கீழே உள்ள பொருட்களை மூட்டை கட்டி மேலே வைக்க ஆரம்பித்துள்ளனர். மழை விடாமல் போவதால் கடந்த முறை தப்பிய பலவீடுகள்
நிச்சயம் இந்த முறை மாட்டிக் கொள்ளும் அபாயமும் உள்ளது.