தமிழகத்தில் இன்று மருந்துக்கடை ஸ்டிரைக்.. சென்னை, மதுரை, கரூர் மாவட்டங்கள் பங்கேற்கவில்லை!
ஆன்லைனில் மருந்து வணிகத்தை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நடைபெறும் மருந்துக் கடையடைப்பு போராட்டத்தில் சென்னை பங்கேற்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: ஆன்லைனில் மருந்துப் பொருட்கள் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டதை கண்டித்து நடைபெறும் கடையடைப்பில் சென்னை, மதுரை மற்றும் கரூர் மாவட்ட மருந்துக்கடைகள் பங்கேற்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்திலும் டிஜிட்டல் மயமாகி வரும் நிலையில் மருந்துப் பொருட்களையும் ஆன்லைனில் வாங்கும் சட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் அனைத்து மருந்து கடைகளும் மூடப்படும் என, அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆன்லைன் மருந்து வணிகத்தால் நோயாளிகள், ஆன்லைனில் மருந்து வாங்கும் போது, போலி மருந்து மற்றும் காலாவதியான மருந்துகளை மாற்றி அனுப்ப, வாய்ப்பு அதிகம் என்று வணிகர்கள் கூறுகின்றனர்.
மருந்து வணிக உரிம கட்டணத்தை, 3,000 ரூபாயில் இருந்து 30 ஆயிரம் ரூபாயாக, மத்திய அரசு உயர்த்தி உள்ளது. இதை எதிர்த்தும், கடைகள் மூடப்படுகின்றன. எனினும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள மருந்துக் கடைகள் இயங்கும் என்று அறிவிக்கப்ப்டடுள்ளது.
இதனால் இன்று முழு கடையடைப்பு காரணமாக 24 ஆயிரம் கடைகள் மூடப்படும் வாய்ப்புள்ளது. தனியார் மருந்துக் கடைகள் மட்டுமே பங்கேற்பதாகவும் கூட்டுறவு மருந்தகங்கள் மற்றும் அம்மா மருந்தகங்கள் உள்ளிட்டவை வழக்கம் போல இயங்கும் என்று அரசு விளக்கமளித்துள்ளது.
இந்நிலையில் கடையடைப்பு குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மருந்து விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் மோகன்குமார் பெரிய மருந்து நிறுவனங்கள் கடையடைப்பில் பங்கேற்காததால் தாங்களும் பங்கேற்கவில்லை என்று தெரிவித்தார். மேலும் சென்னை, மதுரை, கரூர் உள்ளிட்ட 3 மாவட்டங்கள் கடையடைப்பில் பங்கேற்காது என்றார்.