மதுரை சென்ற விமானத்தில் நடுவானில் இயந்திரக் கோளாறு... அதிர்ஷ்டவசமாக 33 பேர் உயிர் தப்பினர் !
சென்னை: சென்னையில் இருந்து மதுரை சென்ற விமானத்தில் ஏற்பட்ட திடீர் இயந்திர கோளாறு காரணமாக மீண்டும் விமானம் சென்னை விமானத்தில் தரையிறக்கப்பட்டது.
சென்னை விமான நிலையம் உள்நாட்டு முனையத்தில் இருந்து இன்று காலை 10 மணிக்கு மதுரைக்கு தனியார் பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது. இதில் 28 பயணிகளும், 5 விமான சிப்பந்திகளும் இருந்தனர்.
விமானம் புறப்பட்டு நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென்று இயந்திர கோளாறு ஏற்பட்டு தொடர்ந்து பறக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து விமானி சென்னையில் உள்ள விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.
அந்த விமானம் மீண்டும் சென்னையிலேயே தரையிறங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. விமானி சாதுர்யமாக செயல்பட்டு காலை 10.30 மணியளவில் விமானத்தை பத்திரமாக சென்னை விமான நிலையத்தில் தரை இறக்கினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு, விமானத்தில் இருந்த 33 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.