சென்னை-மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து: 42 பேர் காயம்
சென்னை: மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில், கடலூர் மாவட்டம் பூவனுார் ரயில் நிலையம் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 42க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையிலிருந்து மங்களூர் செல்லும் மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில், எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து நேற்றிரவு 10 மணிக்கு கிளம்பியது. 23 பெட்டிகளைக் கொண்ட அந்த ரயில் நள்ளிரவு 2மணியளவில் அளவில் கடலூர் மாவட்டத்தில் பூவனூர் விருதாச்சலம் இடையே விஜயமாநகரம் என்கிற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது தடம் புரண்டது.
இதில் 3 ஏசி பெட்டிகள் தண்டவாளத்தைவிட்டு கீழே இறங்கியும் இரண்டு பெட்டிகள் கவிழ்ந்தும் நிலைகுலைந்தன. இந்த விபத்தில் 5 பெட்டிகளில் பயணித்துக்கொண்டிருந்தவர்களில் 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
காயமடைந்தவர்கள் மீட்பு
ரயில் விபத்து நிகழ்ந்த தகவல் அறிந்ததும், விருத்தாச்சலம் டிஎஸ்பி உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள், ஏராளமான போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் அடங்கிய மீட்புக் குழுவினர் அங்கு சென்று உடனடியாக மீட்புப்பணியில் ஈடுபட்டனர். தடம்புரண்டிருந்த பெட்டிகளில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ரயில்வேத்துறை உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளை முடுக்கிவிட்டனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆய்வு செய்த ஆட்சியர்
விபத்து நிகழ்ந்த இடத்திற்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் நேரில் சென்று ஆய்வு செய்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். முதற்கட்ட விசாரணையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ரயில்கள் நிறுத்தம்
விபத்தின் காரணமாக, சென்னை-திருச்சி ரயில்வே மார்க்கத்தில், ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பொதிகை, அனந்தபுரி ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. சென்னை செல்லும் மலைக்கோட்டை, சேது எக்ஸ்பிரஸ் ரயில்கள் பாதி வழியில் நிறுத்தப்பட்டன.
மாற்றுப்பாதையில் இயக்கம்
ரயில் விபத்தால் பாதிவழியில் நிறுத்தப்பட்ட அனந்தபுரி, பொதிகை, முத்துநகர், பாதர், ராஜ்போர்ட் நெல்லை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 8 ரயில்களை, மாற்றுப்பாதையில் இயக்க ரயில்வே நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னை செல்லும் ரயில்கள் அனைத்தும் திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டன.
ரூ.1.50 லட்சம் மாயம்
சென்னை பள்ளி கல்வித்துறை கண்காணிப்பாளர் பத்மநாபன், அரசுப்பணம் ரூ.1.50 லட்சத்துடன் மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் மேற்கொண்டுள்ளார். விபத்துக்குப் பின் அப்பணத்தை காணவில்லை. இதுகுறித்து கருத்து தெரிவித்த ஆட்சியர் சுரேஷ்குமார், உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு அரசுப்பணம் மீட்கப்படும் எனத் தெரிவித்தார்.
பொதுமக்கள் புகார்
நள்ளிரவில் ரயில் விபத்துக்குள்ளான நிலையில் விபத்துக்குள்ளாகி பல மணி நேரத்திற்கு அங்கு எந்த அதிகாரிகளும் வரவில்லை என்று பயணிகளும், பொதுமக்களும் குற்றம் சாட்டினர். உடனடியாக அங்கிருந்த உள்ளூர் மக்கள் உதவிக்கு வந்துள்ளனர். அவர்கள் மூலமாகவே காயமடைந்தவர்கள் அருகில் இருந்த மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு முதலுதவி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ரயில்வே உதவி எண்
மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து குறித்து அதில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் தகவல்களை அறிந்து கொள்ளும் வகையில் ரயில்வேத்துறை அவசர உதவி எண்ணை அறிவித்துள்ளது. 044 29015203 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்களை அறியலாம்.
கிளம்பிய ரயில்
இதனிடையே விபத்தில் சிக்கிய மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பாதிக்கப்பட்ட 5 பெட்டிகளைத்தவிர மீதமுள்ள பெட்டிகளுடன் 7 மணியளவில் மங்களூருக்கு புறப்பட்டு சென்றது.