தமிழகத்தின் அநேக இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு... வானிலை மையம் தகவல்!
தமிழகம் மற்றும் புதுவை மாநில பகுதிகளின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழகம் மற்றும் புதுவையின் பல இடங்களில் இன்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் வடக்கு கடலோர பகுதிகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில், வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாகவும், ஏற்கெனவே உள்ள வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகம், புதுவையில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இன்றும் கனமழைக்கு அதிக வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் காஞ்சிபுரம், தம்மம்பட்டியில் 110 மிமீ மழையும், தேன்கனிக்கோட்டை, பெருங்கலூரில் 100 மிமீ மழையும் பெய்துள்ளது.
சிவகங்கை மற்றும் அஞ்செட்டியில் 90 மிமீ மழையும், புதுக்கோட்டையில் 80 மிமீ மழையும் பெய்துள்ளது. தமிழகம் மற்றும் புதுவையின் அநேக இடங்களில் பரவலாக நல்ல மழை பெய்துள்ளது.