சென்னை மெட்ரோ ரயில்நிலையங்களில் இந்தி பெயர்ப்பலகை....தமிழ் ஆர்வலர்கள் அதிர்ச்சி!
சென்னையில் இயங்கும் மெட்ரோ ரயில் நிலையங்களில் 7 ரயில் நிலைய பெயர்ப்பலகைகளில் இந்தி இடம்பெற்றிருப்பதற்கு தமிழ் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சென்னை : பெங்களூருவில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் இந்தியில் வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகைகளை அம்மாநில அரசு அகற்றியுள்ள நிலையில் சென்னை மெட்ரோ ரயில்நிலையங்களில் இந்தியில் வைக்கப்பட்ட அறிவிப்பு பலகைகள் இன்னும் அகற்றப்படாமல் இருப்பது தெரியவந்துள்ளது.
போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக சென்னையில் அறிவிக்கப்பட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் இயக்கப்பட்ட முதல் தடம் ஆலந்தூர் - கோயம்பேடு இடையேயான மெட்ரோ ரயில் சேவை. சுமார் 10 கி.மீ இந்த மெட்ரோ ரயில் சேவை கோயம்பேட்டில் இருந்து சிஎம்பிடி புறநகர் பேருந்து நிலையம், அரும்பாக்கம், வடபழனி, அசோக்நகர், ஈக்காட்டுத் தாங்கல் வழியாக ஆலந்தூரை சென்று அடைகிறது.
இந்தத் தடத்தில் வைக்கப்பட்டுள்ள பெயர்ப்பலகைகளில் தமிழ், ஆங்கிலம், இந்தி என்று 3 மொழிக் கொள்கையில் பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளது.
இந்த 7 ரயில் நிலையங்கள் தவிர இதர ரயில் நிலையங்களில் 2 மொழிக் கொள்கையான தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் இடம் பெற்றுள்ளது. மெட்ரோ ரயில் நிர்வாகம் 2 மொழிக் கொள்கையே பெயர்ப்பலகையில் இடம் பெறும் என்று கூறியுள்ளது.
மாற்றப்படாத இந்தி பெயர்ப்பலகை
எனினும் ஆலந்தூர் கோயம்பேடு இடையேயான வழித்தடத்தில் உள்ள பெயர்ப்பலகைகள் மட்டும் ஏன் இன்றும் மாற்றப்படாமல் இருக்கிறது என்ற கேள்வியை எழுப்புகின்றனர் தமிழ் ஆர்வலர்கள். ரயில் நிலையத்திற்கு வெளியே வைக்கப்பட்டுள்ள பெயர் பலகை மட்டுமல்லாது ரயிலின் உள்ளே பயணக்குறிப்புகளும் இந்தி மொழியும் சேர்க்கப்பட்டுள்ளது.
எதிர்த்த 'நம்ம மெட்ரோ'
அண்மையில், இந்தி மொழி திணிப்புக்கு எதிராக கர்நாடகாவில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து அங்கு புதிதாக தொடங்கப்பட்ட நம்ம மெட்ரோ ரயில் நிலையங்களில் இந்தியில் வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகைகளில் இடம்பெற்றிருந்த இந்தி அழிக்கப்பட்டது.
அதிர்ச்சி
இந்த நிலையில் இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு பெயர்போன தமிழகத்தின் தலைநகரில் இந்தி அறிவிப்புகளுடன் பலகைகள் வைக்கப்பட்டுள்ளது தமிழ் மொழி ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் தெரிந்தவர்களே.
நடவடிக்கை எடுக்கப்படுமா?
வடமாநிலத்தவர்கள் பயன்பாடு என்பது விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே இருக்கும் போது இன்னும் இந்தி ஏன் அழிக்கப்படவில்லை என்ற கேள்வி எழுகிறது. இந்தியை திணிக்கும் 3 மொழிக் கொள்கையை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்குமா என்பதே தமிழ் ஆர்வலர்களின் எதிர்ப்பார்ப்பு.