ஆர்.கே.நகர் தேர்தல் எதிரொலி: சென்னை மெட்ரோ ரயில் இயக்கம் மேலும் தள்ளிப்போகிறது
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் சேவை ஜூன் முதல் வாரத்தில் தொடங்கப்படலாம் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக வட்டாரங்கள் தெரிவித்திருந்த நிலையில், ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் காரணமாக மேலும் ஒரு மாதத்துக்கு ரயில் இயக்கம் தள்ளிப்போகிறது.
சென்னையில் 2008ம் ஆண்டு ரூ.14,600 கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டன. இப்போது இந்தத் திட்டம் ரூ.20 ஆயிரம் கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இரு வழித்தடங்கள்
மெட்ரோ ரயில் திட்டம் மூலம் சென்னையில் 45.1 கிலோ மீட்டர் தொலைவுக்கு 2 வழித்தடங்களில் ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. வண்ணாரப்பேட்டை - சென்னை விமான நிலையம் இடையே 23.1 கிலோ மீட்டர் தொலைவுக்கு முதல் வழித்தடமும், சென்ட்ரல் - பரங்கிமலை இடையே 22 கிலோ மீட்டர் தொலைவுக்கு 2வது வழித்தடமும் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
கோயம்பேடு-ஆலந்தூர்
இதில், கோயம்பேடு - ஆலந்தூர் இடையே 7.22 கி.மீ. தொலைவுக்கு பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த தடத்தில் ஒரு வழிப்பாதையில் மெட்ரோ ரயில்களை இயக்க மத்திய அரசு கடந்த வாரம் அனுமதி வழங்கியது. முன்னதாக, பாதுகாப்பு தொடர்பான முதல்கட்ட ஆய்வை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மிட்டல் தலைமையான குழுவினர் ஏப்ரல் மாதமும், அதற்கு முன்பும் இரண்டு கட்டமாக ஆய்வுகள் மேற்கொண்டனர்.
அடுத்த வாரம் தொடங்க இருந்தது
இந்நிலையில், ஜூன் மாதம் முதல் வாரத்தில், கோயம்பேடு-ஆலந்தூர் நடுவேயான வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஜெயலலிதா மீண்டும் முதல்வராகியுள்ள இந்த நேரத்தில், அவரது கையால் பச்சை கொடி அசைத்து, ரயில் ஓட்டம் தொடங்கப்ப்டும் என்று கூறப்பட்டது.
நடத்தைவிதிமுறை
இந்நிலையில், காலியான, சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில் ஜூன் 27ம் தேதி இடைதத் தேர்தல் நடைபெறும் என்று மத்திய தேர்தல் ஆணையம் நேற்று மாலை அறிவித்தது. இதைத் தொடர்ந்து உடனடியாக தேர்தல் நடத்தைவிதிமுறைகள், சென்னை மாவட்டம் முழுமைக்கும் அமலாகிவிட்டது.
தேர்தல் அட்டவணை
தேர்தலுக்கான அறிவிக்கை வெளியிடும் நாள் ஜூன் 3, வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூன் 10, வேட்புமனுக்கள் பரிசீலனை ஜூன் 11, வேட்புமனுக்களைத் திரும்பப் பெறக் கடைசி நாள் ஜூன் 13, தேர்தல் நாள் ஜூன் 27, வாக்கு எண்ணிக்கை ஜூன் 30, தேர்தல் நடைமுறைகள் முடிவடையும் நாள் ஜூலை 2.
ஜூலை 2வரை நோ..
எனவே நடத்தை விதிமுறைகளில் அமலில் இருக்கும் ஜூலை 2ம் தேதிவரை எந்த ஒரு நலத்திட்டங்களையும் சென்னை மாவட்டத்தில் அரசால் அறிவிக்கவோ, தொடங்கி வைக்கவோ முடியாது. இதனால், சென்னை மக்களின் நெடுநாள் கனவான மெட்ரோ இயக்கம், மேலும் தள்ளிப்போகியுள்ளது. ஏற்கனவே, ஜெயலலிதா முதல்வராக மீண்டும் பதவியேற்கும் வரையில் மெட்ரோவை இயக்காமல் இருக்க அதிகாரிகள் திட்டமிட்டிருந்ததாக கிசுகிசுக்கப்பட்டது. தற்போது இடைத்தேர்தலாலும் மெட்ரோ தள்ளிப்போவதால், சென்னை மக்கள் டிராபிக் நெரிசலை தவிர்க்க முடியாமல் போய்விட்டது.