நாட்டு மக்களுக்கு ஒரு நல்ல செய்தி... 2 நாட்களுக்கு மழை நீடிக்குமாம்!
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை : வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாகவே மழை பெய்துள்ளதாகவும் தமிழகத்தில் மேலும் இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் நேற்று இரவு முதல் பரவலாக பல இடங்களில் மழை பெய்துள்ளது. இதனிடையே சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தென்மேற்கு வங்க கடலில் வட தமிழகம், தென் ஆந்திரா வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் கடந்த 24 மணி நேரத்தில் மழை பெய்துள்ளது.
அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் 14 செ.மீ மழையும், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் 10. செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை தமிழகத்தில் அனேக இடங்களில் மிதமான மழை பெய்யும். 2 நாட்களுக்கு உள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை இருக்கும்.
சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கான வாய்ப்பு உள்ளது. ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 13ம் தேதி வரையிலான தென்மேற்குப் பருவ மழையை பொருத்தவரை இயல்பான அளவான 146 மில்லி மீட்டரை விட 177 மில்லி மீட்டர் அளவு பதிவாகியுள்ளது.