மோடி, சோனியா வருகை.. இன்றும், நாளையும் சென்னையில் டிராபிக் ஜாமுக்கு ரெடி ஆகவும்!
சென்னை: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரதமர் மோடி ஆகிய உச்சகட்ட பாதுகாப்பு பிரிவிலுள்ள இரு வி.வி.ஐ.பிகளின் வருகையால், இன்று மற்றும் நாளை சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.
தேர்தல் பிரசாரம் களை கட்டியுள்ள நிலையில் தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜகவின் முக்கிய தலைவர்கள் தமிழகத்தில் முகாமிட தொடங்கியுள்ளனர்.
இன்று மாலை 4 மணிக்கு சென்னை ஓல்டு ஏர்போர்ட்டுக்கு சிறப்பு விமானத்தில் வந்து இறங்கும், சோனியா காந்தி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம், புதுச்சேரி சென்று அங்கு பிரசாரத்தில் ஈடுபடுகிறார். இதை தொடர்ந்து ஐஎன்எஸ் அடையாறுக்கு, ஹெலிகாப்டரில் திரும்பும், சோனியா காந்தி, அங்கிருந்து சாலை மார்க்கமாக, தீவு திடலுக்கு செல்கிறார். அங்கு கருணாநிதியுடன் சேர்ந்து பிரசார கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
இரவு 8 மணியளவில் மீண்டும் ஓல்டு ஏர்போர்ட்டில் இருந்து சிறப்பு விமானம் மூலமாக, டெல்லி கிளம்புகிறார். இதனால் மாலை 4 மணி முதல் 8 மணிவரை அண்ணாசாலை உள்ளிட்ட, தெற்கு மற்றும் கிழக்கு சென்னை பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.
நாளை பிரதமர் மோடியும் சென்னை வர உள்ளதால் மாலை நேரத்தில் போக்குவரத்து கடுமையாக பாதிக்க வாய்ப்புள்ளது. இரு முக்கிய தலைவர்களின் அடுத்தடுத்த வருகையால், சென்னை நகரத்தில் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.