வெளிநாட்டு ரயில் மாதிரி இருக்கு... மெட்ரோ ரயிலுக்கு சென்னைவாசிகள் உற்சாக வரவேற்பு
சென்னை: சும்மா பளபளன்னு அட... அட... அட... என்னமா இருக்கு ரயில்வே ஸ்டேசன்... ரயிலு சும்மா குளுகுளுன்னு இருக்குப்பா... அடிக்கடி ஆலந்தூருக்கும் கோயம்பேடு போயிட்டு வரலாம் போல இருக்குப்பா....இது மெட்ரோ ரயிலில் பயணித்த சென்னைவாசிகளின் கருத்து.
வெற்றிலை எச்சில்கள் நிறைந்த ரயில் நிலையங்கள்... குப்பைகள் நிறைந்த ரயில்களை பார்த்து பழகிய சென்னைவாசிகளுக்கு பணத்தை கொடுத்தால் டிக்கெட் தரும் இயந்திரம்; ஏறி நின்றால் நகரும் படிக்கட்டு; அனைத்து பெட்டிகளிலும், குளு குளு ஏசி என, சென்னை ரயில் பயணிகளுக்கு புதுவிதமான அனுபவத்தைத் தந்துள்ளது.
வீடியோ கான்பரன்சிங் முதல்வர்
எப்போது வரும்.... எப்போது வரும் என்று ஏங்கித் தவித்த சென்னைவாசிகளுக்கு மெட்ரோ ரயில் சேவையை வீடியோ கான்பரன்சிங் மூலம் துவக்கி வைத்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. இந்த விழாவில் அரசு தலைமை செயலாளர் கு.ஞானதேசிகன், அரசு முதன்மை செயலாளர் ச.கிருஷ்ணன் மற்றும் சென்னை மெட்ரோ ரெயில் திட்ட நிர்வாக இயக்குனர் பங்கஜ்குமார் பன்சல் கலந்து கொண்டனர்.
உற்சாக வரவேற்பு
ஆலந்தூரில் இருந்து புறப்பட்ட முதல் மெட்ரோ ரயிலில் அதிகாரிகள் பயணித்தனர். இந்த ரயில் 15 நிமிடத்தில் கோயம்பேடு சென்றடைந்தது. இந்த ரயிலுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இரண்டாவதாக ஆலந்தூரில் இருந்து சென்ற ரயிலிலும் பயணிகள் பயணிக்கவில்லை அந்த ரயிலிலும் அதிகாரிகள் பயணித்தனர்..
|
பொதுமக்கள் பயணம்
கோயம்பேடு ரயில்வே நிலையத்தில் இருந்து ஆலந்தூர் புறப்பட்ட மெட்ரோ ரயிலில் பொதுமக்கள் பயணித்தனர். இந்த பயணம் சென்னை ரயில் பயணிகளுக்கு புதுவித அனுபவத்தைத் தந்துள்ளது.
|
சும்மா ஜல்லுன்னு போகுது
ரயிலில் ஏறின வேகத்தில் இறங்கிவிட்டோம். குளுகுளு வசதியோடு 40 ரூபாயில் கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூருக்கு வந்துவிட்டோம் என்று பயணிகள் தெரிவித்தனர். போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்த தங்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் என்றும் பயணிகள் கூறியுள்ளனர்.