நேற்று 106 டிகிரி வெயிலில் வாடிய சென்னை.. இன்று மேக மூட்டம்.. "அம்மாவுக்காகவா"?
சென்னை: சென்னையில் நேற்று 105.98 டிகிரி வெயில் கொளுத்தியது. அனல் காற்றும் வீசியது. இருப்பினும் இன்று பரவாயில்ல என்று கூறும் அளவுக்கு வானம் சற்று மப்பும் மந்தாரமுமாக உள்ளது.
கோடையின் உச்சமான கத்திரி வெயில் காலம் கடந்த 4 ஆம் தேதி தொடங்கியது.
ஆரம்பத்தில் சாந்தமாக இருந்த வெயில் தற்போது மீண்டும் தனது விஸ்வரூபத்தை காட்ட தொடங்கி உள்ளது.
சுட்டெரிக்கும் வெயில்:
கோடை கத்திரி வெயில் முடிய இன்னும் 6 நாட்கள் உள்ளநிலையில் தமிழகம் முழுவதும் வெயில் தற்போது சுட்டெரிக்க தொடங்கி உள்ளது.
வெளுத்து வாங்கிய வெப்பம்:
சென்னையில் நேற்று 105.98 டிகிரி வெயில் கொளுத்தியது. வெயில் வெளுத்து வாங்கியதால் நகரின் முக்கிய சாலைகளில் மதிய வேளைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்தே காணப்பட்டது.
குளிர்பான கடைகளில் கூட்டம்:
வெப்ப தாக்கம் காரணமாக சென்னையில் சாலையோர குளிர்பான கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மாலை நேரத்தில் கடற்கரைகள், பூங்காக்கள் போன்ற இடங்களில் பொதுமக்கள் தஞ்சமடைந்தனர்.
அவதியில் பொதுமக்கள்:
அனல் காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். மின்சார ரயில், மாநகர பஸ்களில் பயணம் செய்த பயணிகள் வியர்வையால் நனைந்தனர். மனிதர்கள் மட்டுமின்றி பறவைகள், நாய், பூனை போன்ற விலங்கினங்களும் அவதிபட்டனர்.
குளிர்ச்சியூட்டும் பொருட்கள்:
இளநீர், தர்பூசணி போன்ற உடலுக்கு குளிர்ச்சியூட்டும் பொருட்கள் விற்பனை நேற்று மும்முரமாக நடைபெற்றது. வரும் நாட்களிலும் வெயில் அதிகம் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையத்தினர் தெரிவித்தனர்.
ஜெயலலிதாவுக்காக வெயில் பதுங்குகிறதா
7 மாதங்களுக்குப் பிறகு இன்றுதான் ஜெயலலிதா தனது வீட்டை விட்டு வெளியே வருகிறார். எனவே இன்று வெயில் சற்று தணிந்து காணப்படுகிறதோ?