மெரினா கூத்து....சுற்றுலா வந்த வெளிமாநிலத்தவரையும் போராட்டக்காரர்கள் என தூக்கிட்டுப் போன போலீஸ்!
மெரினாவில் நேற்று மாலை நினைவேந்தல் கூட்டத்திற்காக கூடியவர்களை கைது செய்த போலீசார் சுற்றி பார்க்க வந்த வெளிமாநிலத்தவரையும் கைது செய்து அழைத்து சென்ற வீடியோ வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி வருகிறது.
சென்னை : சென்னை மெரினாவில் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு பேரணி செல்ல முற்பட்டோரை கைது செய்த போலீசார் கருப்புச் சட்டை போட்டிருந்ததால் வெளிமாநிலத்தவரையும் கைது செய்து சென்ற வீடியோ வைரலாக வாட்ஸ் அப்பில் பரவி வருகிறது.
முள்ளிவாய்க்கால் நினைவாக மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி ,இயக்குனர் கவுதமன் , தமிழக வாழ்வுரிமைக்கட்சி தலைவர் வேல்முருகன் உட்பட 281பேர் மெரினா கடற்கரையில் பேரணியாக செல்ல முயன்ற போது காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். திருமுருகன் காந்தி உட்பட 17 பேர் மீது 8 பிரிவின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. மே 17 இயக்கத்தினர் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையுமே போலீசார் கைது செய்து வாகனங்களில் அழைத்து சென்றனர்.
ஒரு போலீஸ் வாகனத்தில் கைது செய்து அழைத்து செல்லப்பட்டவர்களில் தமிழ்நாட்டிற்கு சொந்தமில்லாத ஒரு முகம் இருந்ததை கண்டு சக தமிழகர்கள் அவரை யாரென்று கேட்டுள்ளனர். சுற்றியும் முழித்து பார்த்த அந்த நபர் நாம் இப்போது எங்கே செல்கிறோம் என்று கேட்டுள்ளார்.
அதன் பிறகு விசாரித்தால் தான் தெரிகிறது அவர் வெளிமாநில ஆளாம், சுற்றிப் பார்ப்பதற்காக வந்த அவரையும் சேர்த்தே போலீசார் கைது செய்துள்ளனர். அவர் கைது செய்யப்பட்டதற்கும் என்ன காரணம் தெரியுமா அந்த நபர் கருப்பு பனியன் அணிந்திருந்தாராம்.
மெரினா கூத்து....சுற்றுலா வந்த வெளிமாநிலத்தவரையும் போராட்டக்காரர்கள் என தூக்கிட்டுப் போன போலீஸ்! pic.twitter.com/7jcxt6srB5
— Oneindia Tamil (@thatsTamil) May 22, 2017
அடக்கொடுமையே என்று நம் இளஞ்சிங்கள் உடனே அவரைப் பற்றி செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். அதில் பேசிய அந்த நபர் "இன்னைக்கு சன்டேங்கிறதால சுத்தி பார்க்க வந்தேன், என்னையும் புடிச்சிட்டு வந்துட்டாங்க" என்று கூறியுள்ளார்.
சென்னையில் பணியாற்றி வரும் சென்ட்ரலில் இருந்து ஓலா காரில் ஜில்லுனு ஏசியல மெரீனாவ சுத்தி பார்க்க வந்தேன் என்னை அள்ளிட்டு வந்துட்டாங்களே என சிரிக்கிறார். போலீஸ் வேனில் அழைத்து செல்லப்பட்ட வெளிமாநில ஆளிடம் தமிழ்நாட்டு போலீசிடம் இருந்து யாரும் தப்பிக்க முடியாது என்று நக்கல் கூட்டுகின்றனர் சக இளைஞர்கள். அந்த வெளிமாநில ஆளின் மிச்ச புலம்பலை நீங்களே வீடியோவில் பார்த்து தெரிஞ்சுக்கோங்க.