மெட்ரோ ரயில்... கருணாநிதிக்கு பாராட்டு விழா- தி.மு.க. கூட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுப்பு
சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு பாராட்டு விழா நடத்த இருந்த பொதுக்கூட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
சென்னையில் மெட்ரோ ரயில் போக்குவரத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார். மெட்ரோ ரயில் திட்டத்தைக் கொண்டு வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு பாராட்டு பொதுக்கூட்டம் நடத்த ஆலந்தூர் பகுதி தெற்கு தி.மு.க. சார்பில் முடிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக ஆலந்தூர் நீதிமன்றம் எதிரே உள்ள மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என தி.மு.க. பகுதி செயலாளர் என்.சந்திரன் பரங்கிமலை போலீசில் மனு அளித்தார்.
ஆனால் இந்த இடம் பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்கப்பட்ட பகுதி கிடையாது. எனவே பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்க முடியாது என போலீசார் மறுத்துவிட்டனர்.
கடந்த ஜூன் 1-ந் தேதி இந்த இடத்தில் தான் தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்தநாள் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதாகவும், ஆனால் தற்போது போலீசார் அனுமதி மறுத்துவிட்டதால் நீதிமன்ற உதவியை நாட உள்ளதாகவும் தி.மு.க.வினர் தெரிவித்துள்ளனர்.