தடையை மீறி பஸ் டே கொண்டாட்டம்... சென்னையில் கல்லூரி மாணவர்கள் அலம்பல்!
சென்னையில் கல்லூரி மாணவர்கள் தடையை மீறி பஸ் டே கொண்டாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை : சென்னையில் கல்லூரி மாணவர்கள் பஸ் டே கொண்டாடுவதற்கு இருக்கும் தடையை மீறி மாணவர்கள் திடீரென பட்டாசு வெடித்து பஸ் டே கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
சென்னை பட்டாபிராம் முதல் அண்ணா சதுக்கம் வரை செல்லும் பேருந்தில் திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் இருந்து 20 மாணவர்கள் ஏறி வந்துள்ளனர். பேருந்து பாரதி சாலை அருகே வந்த போது எதிர் திசையில் கையில் மாலையுடன் வந்த மாணவர்கள் அரசுப் பேருந்திற்கு மாலை அணிவித்து பஸ் டே கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதோடு பேருந்தின் மீது ஏறியும் மாணவர்கள் சிலர் கத்தி கோஷமிட்டனர். அரசுப் பேருந்திற்கு போடுவதற்காக கொண்டு வந்த மாலையை ஊர்வலமாக எடுத்து வந்து வாகனத்தில் போட்டதோடு, பட்டாசுகள் வெடித்து, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்களின் இந்த பஸ் டே கொண்டாட்டத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் பஸ் டே கொண்டாட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும் பேருந்து தினம் கொண்டாடும் போது பட்டாசு வெடிக்கக் கூடாது, பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் பஸ் டேவை மாணவர்கள் கொண்டாடவே கூடாது என்றும் கடுமையான நிபந்தனைகளை நீதிமன்றம் விதித்துள்ளது.
ஆனால் தடையை மீறி மாநிலக் கல்லூரி மாணவர்கள் 50 பேர் ஊர்வலமாக சென்று பஸ் டே கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அரசுக் கல்லூரி மாணவர்களான தங்களுக்கு பஸ் டே ஒரு சிறப்பான நிகழ்வு என்றும் கல்லூரியில் பொழுதுபோக்கும் நிகழ்ச்சி எதுவும் இல்லாத நிலையில் தாங்கள் பஸ் டே கொண்டாடுவதை யாரும் தடுக்க முடியாது என்றும் மாணவர்கள் கோஷமிட்டனர்.
27 ஹெச் பேருந்திற்கு மாலை போட்டு பேனர் கட்டி தடையை மீறி மாணவர்கள் நடத்தி பஸ் டே கொண்டாட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பேருந்தின் மீது ஏறி கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்களை எச்சரித்து அனுப்பினர். எனினும் பாரதி சாலையில் இருந்து கண்ணகி சிலை நோக்கி வந்த மாணவர்கள் கத்தி ஆரவாரம் செய்தபடியே ஊர்வலமாக கல்லூரிக்கு சென்றனர்.