இது என்ன சோதனை.. ஒன்றரை வருடத்தில் 3வது முறை தேர்தலை சந்திக்கிறது ஆர்.கே.நகர்
ஆர்.கே.நகர் தொகுதி 18 மாதங்களில் 3 முறை தேர்தலை சந்திக்க உள்ளது. மூன்று, தேர்தல்தளுக்குமே ஒரு வகையில் ஜெயலலிதாவே காரணமாக இருப்பது கவனிக்கத்தக்க அம்சமாகும்.
சென்னை: சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில் கடந்த 18 மாதங்களில் மூன்றாவது முறையாக, தேர்தல் நடைபெறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு 2017ம் ஆண்டு மே மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ளது.
2011 சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல்வரானார். சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தால், குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதால் கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி ஜெயலலிதாவின் எம்எல்ஏ மற்றும் முதல்வர் பதவி பறிபோனது. ஜெயலலிதாவின் முதல்வர் பதவி பறிபோனதும் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்றார்.
பின்னர், பெங்களூரு உயர் நீதிமன்றம் 2015, மே 11ம் தேதி வழங்கிய தீர்ப்பில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து ஜெயலலிதா அதே மாதம், 23ம் தேதி தமிழக முதல்வராக மீண்டும் பதவியேற்றார்.
வெற்றிவேல் ராஜினாமா
அப்போது, அவர் எம்எல்ஏவாக இல்லை. என்பதால், ஜெயலலிதா எம்எல்ஏ ஆக வேண்டும் என்பதற்காக சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக எம்எல்ஏவாக இருந்த வெற்றிவேல் அம்மாதம் 17ம் தேதியே ராஜினாமா செய்தார். அதனால் ஆர்.கே. நகர் தொகுதியில் மறுமாதமான ஜூன் 27ம் தேதியே இடைத்தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
ஜெயலலிதா வெற்றி
பின்னர், கடந்த மே 16ம் தேதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் மீண்டும் ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக ஜெயலலிதா போட்டியிட்டார். அந்த தேர்தலிலும் ஜெயலலிதா வெற்றி பெற்றார். ஜெயலலிதா முதல்வரானார்.
இடம் காலி
இந்நிலையில், ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த 5ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றிபெற்ற ஆர்.கே.நகர் தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மே மாதத்திற்குள் தேர்தல்
ஆர்.கே.நகர் தொகுதி காலியானதை தொடர்ந்து அடுத்த ஆண்டு, மே மாதம் இறுதிக்குள் அங்கு இடைத்தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும். அதன்படி பார்த்தால், 18 மாதங்களில் ஆர்.கே.நகர் தொகுதியில் மட்டும் 3 முறை தேர்தல் நடைபெறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆர்.கே.நகர் தொகுதியில், சசிகலா போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.