சென்னையில் சராசரியை விட அதிகமாக வெளுத்து வாங்கிய 114 செ.மீ மழை!
சென்னை: சென்னையில் இந்தாண்டில் கடந்த ஒரு மாதத்தில் 114 செ.மீ மழை பெய்துள்ளதாக மண்டல வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
சென்னையில், சராசரியாக 79 செ.மீ மழை மட்டுமே பெய்துவந்ததாகவும், இந்த ஆண்டு இருமடங்கு கூடுதலாக மழை பெய்துள்ளதாக கூறியுள்ளார் ரமணன்.
சென்னையில் பெய்து வரும் தொடர் மழைக் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று பிற்பகலில் சிலமணிநேரங்கள் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் மின் இணைப்பு பாதிக்கப்பட்டு, சாலை, வீடுகளில் மழை நீர் புகுந்து மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை மற்றும் அதன் தெற்கு, வடக்குப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் தற்போது நாள் கணக்கில் மழைநீரில் மிதக்கின்றன. எப்போதும் வேளச்சேரி, மடிப்பாக்கம் பகுதிகள்தான் மழையில் பாதிக்கப்படும். ஆனால், இம்முறை செங்கல்பட்டு, தாம்பரம், காஞ்சிபுரம், முடிச்சூர், கூடுவாஞ்சேரி, பெருங்களத்தூர், மாதவரம், எண்ணூர் என சென்னை மற்றும் சென்னையை ஒட்டிக் கொண்டிருக்கும் அனைத்துப் பகுதிகளுமே தண்ணீரில் தத்தளிக்கின்றன.
கூடுதல் மழை
சென்னையில் இயல்பைவிட இருமடங்கு மழை பெய்துள்ளது. அக்டோபர் 1ம் தேதி முதல் இன்று வரை 57 செ.மீ., மழைதான் பெய்திருக்க வேண்டும் ஆனால் இயல்பைவிட அதிகமாக 114 செ.மீ., சென்னையில் பெய்துள்ளது என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் தெரிவித்துள்ளார்.
பத்தாண்டுகளுக்குப் பிறகு
சென்னையின் மழை சராசரி 79 செ.மீ. தான். மூன்று மாத கால மழை அளவு இயல்பைக் காட்டிலும் கூடுதல்தான். ஆனால் இது டிசம்பர் மாதம் வரை கணக்கிடும் போது தான் இறுதியான சராசரி தெரிய வரும். இதுபோல கடந்த 2005ம் ஆண்டு கன மழை பெய்துள்ளது என்றும் ரமணன் கூறினார்.
வடகிழக்குப் பருவமழையால் தமிழகத்தில் இதுவரை சுமார் 48செ.மீ மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 3 மாதங்களில் பெய்ய வேண்டிய 44செ.மீ மழையை தாண்டி அதிக மழை பெய்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார் ரமணன்.
4 மணிநேரத்தில் மழை
நேற்று அதிகபட்சமாக பாபநாசத்தில் 18 செ.மீ மழையும், தாம்பரத்தில் 17.செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. அண்ணாபல்கலைக்கழகம் பகுதியில் 16 செ.மீ அளவு மழை அளவு பதிவானதாக ரமணன் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் மழை
சென்னையில் கடந்த 1846ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி 52 செ.மீ பெய்துள்ளது. அதேபோல 2005ம் ஆண்டு அக்டோபர் 27ம் தேதி 27.3 செ.மீ மழை பெய்துள்ளது. இந்த ஆண்டு நவம்பர் 16ம் தேதி 24.6 செ.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
சாதனை மழை அளவு
வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட புள்ளி விவரப்படி, சென்னையில் இதற்கு முன், 1918 நவம்பரில், 108 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. இந்த ஆண்டு இதுவரை 114 செ.மீ மழை சென்னையில் பதிவாகியுள்ளது. நவம்பர் 1 முதல், 22 வரை மட்டும் சென்னையில், 104 செ.மீ., மழை பெய்துள்ளது.
சரியான திட்டமிடல் இல்லையே
கடந்தகாலங்களில் பெய்த கனமழைக்கு சென்னைவாசிகள் பலரும் சிக்கித் தவித்துள்ளனர். ஏற்கனவே சென்னை சாலைகளில் நீச்சலடித்தும், படகுகளில் சென்றும் பழகியவர்களுக்கு இது புதிய விசயமில்லை. ஆனால் புறநகரில் குடியேறியவர்களுக்கு இது புதிய விசயம்தான்.
ஆட்சியாளர்களுக்கு தெரியுமா?
ஆனால் 2005ம் ஆண்டு தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள்தான். இப்போதும் ஆள்கிறார்கள். அப்போது சொன்ன அதே வார்த்தையான மூன்று மாதத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்ததுதான் பாதிப்புக்கு காரணம் என்று கூறுவதுதான் வேதனையான விசயம். கடந்த கால பாதிப்புக்களில் இருந்து இதுவரை எந்த பாடமும் கற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.