சென்னையில் இன்று 100 டிகிரி வெயில்.. இன்னும் 2 நாள் வெளுக்குமாம்!
சென்னை: தமிழகத்தில் நேற்று போலவே இன்றும் வெயில் கடுமையாக அடித்து வருகிறது. சென்னை முதல் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
நாடு முழுவதும் பரவலாக அனல் அலை வீசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வானிலை ஆய்வு மையமும், வெயில் தொடரும் என்று அறிவித்துள்ளது.
சென்னையில் நேற்றும் 100 டிகிரியைத் தாண்டி வெயில் கொளுத்தியது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கடும் வெயிலையும், வெப்பத்தையும் சென்னை மக்கள் சந்தித்து வருகிறார்கள்.
பகலில் கடும் வெயிலுடன், அனல் காற்றும் வீசி வருகிறது. இதனால் தமிழகத்திலேயே சென்னையில்தான் கடந்த சில நாட்களாக வெயில் அதிகமாக உள்ளது. இதனால் மக்கள் வெளியில் நடமாட்டத்தைக் குறைத்துக் கொண்டு வீட்டோடு இருந்து வருகிறார்கள். அவசியம் என்றால் மட்டுமே வெளியில் தலை காட்ட துணிகிறார்கள்.
கடல் காற்றும் உரிய சமயத்தில் வருவதில்லை. தாமதமாக வீசுவதால் பகல் முழுவதும் வெப்பத்தில் புழுங்கும் நிலையில் மக்கள் உள்ளனர். மாலைக்கு மேல்தான் சற்று ஆசுவாசமான நிலை காணப்படுகிறது.
இந்த வெயில் இன்னும் 2 நாட்களுக்கு நீடிக்கும், வறண்ட வானிலையே நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை பிற்பகல் 12 மணி நிலவரப்படி 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியிருந்தது.