10 ஆண்டுகளில் இல்லாத வெப்பத்தில் வாடும் சென்னை.. ஜூலையில் "சாதனை" வெயில்!
சென்னை: சென்னையில் கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஜூலை மாதம் வெப்ப நிலை நிலவுவதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கத்திரி வெயில் முடிந்து விட்டது. இதோ ஆடி மாதமும் வரப் போகிறது. காற்றும் கூட வீச ஆரம்பித்து விட்டது. ஆனாலும் தமிழகத்தின் பல பகுதிகளில் கடும் வெயில் அடித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் வெயில் கொளுத்துகிறது.
கத்திரி வெயில் சமயத்தில் அடிப்பதைப் போல வெயில் அடிப்பதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
குறையாத வெயில்
கத்திரி வெயில் முடிந்தால் வெயில் படிப்படியாக குறையும் என்பார்கள். ஆனால் சென்னையில் நேர் மாறாக உள்ளது.
100 டிகிரிக்கு மேல்
தொடர்ந்து 100 டிகிரியைத் தாண்டி வெயில் கொளுத்துவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னை, நெல்லை உள்பட பல நகரங்களில் வெயில் 100 டிகிரியைத் தாண்டி போய்க் கொண்டிருக்கிறது.
சென்னையில் அதிக வெயில்
குறிப்பாக சென்னையில் 105 டிகிரி அளவுக்கு வெயில் அடித்து மக்களை டென்ஷனாக்கி வருகிறது. இதை மக்கள் நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை.
காத்தும் அடிக்குது வெயிலும் கொளுத்துது
இத்தனைக்கும் சென்னையில் கடந்த சில நாட்களாகவே நன்று காற்று வீசி வருகிறது. ஆனால் வெயில்தான் குறைந்தபாடில்லை.
10 வருடங்களில் இல்லாத அளவு
கடந்த 10 வருடத்தில் ஜூலை மாதத்தில் இவ்வளவு வெயில் அடித்ததில்லையாம். இப்போதுதான் அதிகபட்சமாக 105 டிகிரி வெயில் சென்னையில் பதிவாகியுள்ளதாம்.
மே மாதம் பரவாயில்லை
வழக்கமாக வெயில் கொளுத்தும் மே மாதத்தில் இந்த முறை வெயில் குறைவாக இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த முறை மே மாதம் சற்று குளுமையாக இருந்ததாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நீடிக்கும்
தற்போது நிலவி வரும் வெயிலும், அனலும் இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.