"ஊதா... கலரு....ரிப்பன்" பில்டிங் நிறத்தில் ஒளிர்வது சர்க்கரை நோய் விழிப்புணர்வுக்காக..
சென்னை: உலக சர்க்கரை நோய் விழிப்புணர்வு தினத்தை ஒட்டி சென்னை மாநகராட்சி கட்டிடமான ரிப்பன் மாளிகை நீல நிறத்தில் ஒளிரச்செய்யப்பட்டது.
நீரிழிவு நோயின் உலக அடையாள சின்னம் நீலநிற வட்டம் ஆகும். இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் பல லட்சக்கணக்கான மக்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மெல்லக் கொல்லும் நோயான சர்க்கரை நோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நவம்பர் 14ஆம் தேதி உலக சர்க்கரை நோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இதனை குறிக்கும் வகையில் பழமையும், சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான ரிப்பன் மாளிகை நீல நிறத்தில் ஒளிரச் செய்யப்பட்டது. நூற்றாண்டு பாரம்பரியம் மிக்க ரிப்பன் மாளிகை நீல நிறத்தில் ஒளிர்ந்ததை சென்னை நகர மக்கள் கண்டு ரசித்தனர்.
இதேபோல கடந்த ஆண்டு சென்ட்ரல் ரயில் நிலையம் நீல நிற ஒளியில் மிளிர்ந்தது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சர்க்கரை நோய் விழிப்புணர்வுக்காக தாஜ்மகால் நீல நிறத்தில் ஒளிரச் செய்யப்படுகிறது. இதேபோல பாரம்பரியமிக்க ஆக்ரா கோட்டை, பதேபூர் சிக்ரி ஆகியவை நீல நிறத்தில் ஒளிரூட்டப்படுகிறது.
தொல்பொருள் ஆராய்ச்சி அமைப்பு பாரம்பரிய மிக்க 3 கட்டிடங்களுக்கு நீல நிறத்தில் ஒளிரச்செய்ய அனுமதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.