தடுக்கி விழுந்தா நேரா சொர்க்கம் தான்.... கரடு முரடான சென்னை சாலைகளில் வாகன ஓட்டிகள் சாகஸம்
சென்னை: கடந்த சில நாட்களாக சென்னையில் பெய்த கனமழையால் வெள்ளத்தால் சூழப்பட்டு அரித்துச் செல்லப்பட்ட சாலைகள் குண்டும் குழியுமாகக் காணப்படுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
அண்மையில் பெய்த வடகிழக்குப் பருவமழை சென்னை நகரையே முழுவதுமாகப் புரட்டிப்போட்டது. இதனால் பெரும்பாலான சாலைகளை மழைநீர் சூழ்ந்து, ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. வடசென்னையில் உள்ள புளியந்தோப்பு, வியாசர்பாடி, பெரம்பூர், அயனாவரம், கீழ்ப்பாக்கம், எழும்பூர், வில்லிவாக்கம், அண்ணாநகர் உள்ளிட்ட சாலைகளும், மாதவரம்-பொன்னியம்பேடு சாலையும், புறநகர் பகுதிகளான வேளச்சேரி, மடிப்பாக்கம், அம்பத்தூர் சாலைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் மழை நீர் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடியதால் சாலைகள் அரித்துச் செல்லப்பட்டு கரடு முரடாகக் காட்சியளிகின்றன. எழும்பூர் கென்னட் சாலையில் கழிவுநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் சாலையைக் கடக்க முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
சாலைகளின் பெரும்பாலான இடங்களில் மேடு-பள்ளம் உருவாகி உள்ளதால் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பீக் ஹவர்ஸ் எனப்படும் காலை 9 மணியிலிருந்து 11 மணி வரையும், மாலை 6 மணியிலிருந்து 9 மணி வரையும் நகரின் பெருமபாலான இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கி பயணிகள் கடும் அவதியுறுகின்றனர்.
இந்தநிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பத்திரிக்கையாளர்களை சந்தித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மழைக்காலம் முடிவடைந்த பிறகு சென்னை நகரில் சேதமடைந்த சாலைகள் அனைத்தும் கணக்கீடப்பட்டு, போர்க்கால நடவடிக்கையில் சீரமைக்கப்படும் என்று தெரிவித்தார். தமிழக அரசின் நெடுஞ்சாலை துறை, மற்றும் மாநகராட்சி சார்பிள், சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.