தலைமை செயலகத்தில் கெடுபிடிகள்... சென்னையில் பத்திரிகையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
சென்னை: தமிழக அரசின் தலைமை செயலகத்தில் புதிய கெடுபிடிகள் விதிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து சென்னையில் பத்திரிகையாளர்கள் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழக சட்டசபையில் இருந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் 79 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் சட்டசபை வளாகத்தில் போட்டி சட்டசபை கூட்டத்தை நடத்தினர்.
இதனை அனைத்து ஊடகங்களும் பதிவு செய்தன. இதற்கு மறுநாள் காவல்துறை மானியக் கோரிக்கை நாளில் சட்டசபை வளாகத்தில் 3,000க்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
அத்துடன் பத்திரிகையாளர்கள் அறைக்கு செல்லும் கதவும் மூடப்பட்டது. இதனால் பத்திரிகையாளர்கள் கடுமையாக அலைகழிக்கப்பட்டனர். வழக்கமாக செய்தி சேகரிக்க நிற்கும் இடத்தில் இருந்தும் பத்திரிகையாளர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.
இதற்கு பல்வேறு பத்திரிகையாளர் சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. இந்த நிலையில் இன்று சென்னையில் அனைத்து சங்கங்களைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் கூட்டாக தமிழக அரசின் புதிய கெடுபிடிகளைக் கண்டித்தும் அவற்றை தளர்த்தக் கோரியும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் பங்கேற்றனர்.