10ஆம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை - பலாத்காரம் செய்து மிரட்டிய பள்ளி தாளாளர் கைது
சென்னையில் பத்தாம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக பள்ளி தாளாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை: ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்ததால் பத்தாம் வகுப்பு மாணவி சென்னையில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு முன்பாக மாணவி எழுதிய கடிதத்தின் அடிப்படையில் பள்ளி தாளாளரை கோயம்பேடு போலீசார் கைது செய்து உள்ளனர்.
தற்கொலை செய்து கொண்ட மாணவியின் பெயர் மணிமாலா. 15வயதாகும் மணிமாலா பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். இவர் சென்னை கோயம்பேடு சேமாத்தம்மன் நகர் 2-வது செக்டர் பகுதியை சேர்ந்தவர் பழனிவேலு. இவரது மனைவி மகேஸ்வரி ஆகியோரின் மகளாவார்.
தேர்வு விடுமுறையில் வீட்டில் இருந்த மணிமாலா புதன்கிழமையன்று திடீரென தனது உடலில் தீவைத்துக்கொண்டார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக கோயம்பேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். பள்ளி தேர்வு முடிவு பயத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்பட்டது. எனினும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
தற்கொலை கடிதம்
மணிமாலாவின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது மணிமாலா எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் சிக்கியது. அதில் தற்கொலை செய்ததற்கான காரணத்தை மணிமாலா எழுதி வைத்திருந்தார். தனது சாவுக்கு காரணம் சரவணன்தான் என்று கூறியிருந்தார். இதனால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.
போலீஸ் விசாரணை
மாணவியின் தற்கொலை கடிதத்தை கைப்பற்றி கோயம்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்த சரவணன் பழனிவேலுவின் தங்கை கணவர். இவர் அதே பகுதியில் வசித்து வருகிறார். இவர் விருகம்பாக்கம் சின்மயாநகர் அழகப்பா நகரில் தனியார் பள்ளி நடத்தி வருகிறார்.
மாணவி பலாத்காரம்
சரவணன், மணிமாலாவுக்கு மாமா முறை என்பதால் அவரது வீட்டுக்கு சென்று மணிமாலா அடிக்கடி விளையாடுவது வழக்கம். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மணிமாலாவை விளையாட வருமாறு சரவணன் அழைத்துள்ளார். வீட்டுக்கு வந்த மணிமாலாவுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து சரவணன் பலாத்காரம் செய்து விட்டார். மயக்கம் தெளிந்தபோது இதுபற்றி வெளியே சொல்லக்கூடாது என்றும் மிரட்டினார். இதனால் மணிமாலா பெற்றோரிடம் கூட சொல்லவில்லை.
பெற்றோர் அதிர்ச்சி
இந்த நிலையில் மணிமாலாவுக்கு அடிக்கடி உடல் சோர்வு ஏற்பட்டது. அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது அவர் கர்ப்பமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மணிமாலாவிடம் காரணத்தை கேட்டபோது அவர் நடந்தவற்றை கூறினார். இதனால் அவளது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். சரவணன் உறவினர் என்பதால் தட்டிக்கேட்க முடியாமல் தவித்தனர்.
தீக்குளித்து தற்கொலை
இந்த நிலையில் சரவணன் மணிமாலாவை சந்தித்து தன்னிடம் இருவரும் ஒன்றாக இருப்பது போன்ற ஆபாச வீடியோ இருப்பதாகவும், தான் அழைக்கும் போதெல்லாம் தன்னுடன் உல்லாசம் அனுபவிக்க வரவேண்டும் என்றும் வற்புறுத்தினார். இதனால் மணிமாலா அதிர்ச்சி அடைந்தார். நேற்று யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்தது.
போலீஸ் வழக்குப் பதிவு
இந்த சம்பவம் தொடர்பாக சரவணன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போலீஸ் தேடுவதை அறிந்து சரவணன் தலைமறைவாகி விட்டார். இன்று காலையில் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த சரவணனை போலீசார் கைது செய்தனர். சொந்த மாமனே பலாத்காரம் செய்து மிரட்டிய சம்பவம் உறவினர்களிடையே அதிர்ச்சியடைந்தார்.