ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய மாணவர்களை அடித்து உதைத்து போலீசார் கைது
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை புதுக்கோட்டை நெடுவாசல் கிராமத்தில் செயல்படுத்தக் கூடாது என்று கூறி சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் அடித்து உதைத்து கைது செ
சென்னை; புதுக்கோட்டை நெடுவாசல் கிராம மக்களுக்கு ஆதரவாகவும், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகவும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்திய மாணவர்களை போலீசார் அடித்து உதைத்து இழுத்துச் சென்று கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை நெடுவாசல் கிராமத்தில் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த அனுமதி வழங்கியுள்ளது. இதனை எதிர்த்து 13 நாட்களாக அந்த கிராமத்து மக்கள், விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதற்கு ஆதரவு தெரிவித்து சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டம் அருகில் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதி வாங்காமல் போராட்டம் நடத்தக் கூடாது என்று இவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.
அதனை ஏற்க மறுத்து மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் சொல்வதை மாணவர்கள் கேட்கவில்லை என்ற காரணத்தைக் கூறி போலீசார் மாணவர்களை அடித்து உதைத்தனர். பின்னர், இழுத்துச் சென்று போலீஸ் வேனில் ஏற்றினார்கள். இதனால் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் பரபரப்பு ஏற்பட்டது.
கைது செய்யப்பட்டுள்ள மாணவர்கள் மீது வழக்கு எதுவும் பதியப்படமாட்டாது என்றும், அருகில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்துவிட்டு அனுப்பி விடுவோம் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.