முதல்வர் வர வேண்டும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு என அறிக்கை தர வேண்டும்.. மாணவர்கள் நிபந்தனை
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து முதல்வர் பன்னீர்செல்வம் அறிக்கை தரும் வரை மெரினாவில் நடைபெற்று வரும் போராட்டம் தொடரும் என போராட்டக்குழு அறிவித்துள்ளது.
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், அலங்காநல்லூரில் கைது செய்தவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரியும் சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள் நள்ளிரவை தாண்டியும் போராட்டம் நடத்தி வருகின்றனர். முதல்வர் பன்னீர்செல்வம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு என அறிக்கை தர வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு தரவாக போராடியவர்களை போலீசார் கைது செய்தது. இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. இதே போன்று சென்னை மெரினா கடற்கரையில் சென்னையில் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் நேற்று காலை 7 மணிக்கு ஒன்று கூடினார்கள்.
சமூக வலைதளம் மூலமாக ஒன்றிணைந்த இவர்கள், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமைச் செயலகம் செல்லும் வழியில் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். போராட்டத்தை நிறுத்திக் கொள்ள போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதனை ஏற்க போராட்டக்காரர்கள் மறுத்துவிட்டனர்.
மேலும், முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் போராட்டம் நடக்கும் இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே போராட்டத்தை கைவிட முடியும் என்று மாணவ, மாணவிகள் திட்டவட்டமாக கூறிவந்தனர். இதனால் சென்னையில் காலை 7 மணிக்கு தொடங்கிய போராட்டம் பல மணிநேரத்திற்கும் மேலாக விடிய விடிய நீடித்துக் கொண்டிருக்கிறது.
இதனிடையே அதிகாரிகள் நடத்திய 4 கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. ஊடகங்கள் வாயிலாகவோ அல்லது முதல்வர் நேரில் வந்து உறுதி அளித்தால் மட்டுமே போராட்டத்தை விலக்கிகொள்வதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மெரினாவில் போராடும் இளைஞர்களை நள்ளிரவில் அழைத்து தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃப.பாண்டியராஜன் ஆகியோர் கொண்ட குழு இந்த பேச்சுவார்த்தையை நடத்தியது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் சார்பாக 10 பேர் கொண்ட போராட்டக் குழு இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டது.
அப்போது ஜல்லிக்கட்டு குறித்து முதல்வர் விரைவில் முழுமையான அறிக்கை வெளியிடுவார் என அமைச்சர்கள் குழு தெரிவித்தது. இதன்பின்னர் முதல்வரின் அறிக்கையை பொறுத்தே அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் எனவும் அதுவரை போராட்டம் தொடரும் எனவும் போராட்டக்குழு அறிவித்துள்ளது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் முதல்வர் பன்னீர்செல்வம் போராட்டக் களத்திற்கு நேரில் வர வேண்டும் என ஒருமித்த குரலாக கோரிக்கை வைத்துள்ளனர்.