கர்நாடகாவில் கைதான 3 தீவிரவாதிகள் யார்? போலீசார் விசாரணை
பெங்களூர்: கர்நாடகாவில் கைதான 3 தீவிரவாதிகளுக்கு உத்தரபிரதேச மாநில சிமி அமைப்பை சேர்ந்தவர்களுடன் தொடர்பு இருப்பதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் குண்டுவெடிப்பில் இவர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது ஆனால் இவர்களுக்கும், அந்த குண்டு வெடிப்பிற்கும் தொடர்பு இல்லை என்று சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த மே மாதம் 1ஆம் தேதி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெங்களூர்-கவுகாத்தி ரயிலில் 2 குண்டுகள் வெடித்தன. இதில் ஆந்திர மாநிலம் குண்டக்கல்லை சேர்ந்த சுவாதி (வயது 24) என்ற என்ஜினீயர் பலியானார். மேலும் 14 பேர் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த குண்டு வெடிப்பில் சிமி அமைப்பினருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் தர்வார் நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஆசிப் (25) என்பவர் கடந்த 2 நாட்களுக்கு முன்னர், காயங்களுக்கு சிகிச்சை பெற சென்றார்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள், அந்த காயங்கள் எப்படி வந்தது என்பது குறித்து விசாரித்தனர். உடலில் ஏற்பட்ட காயம் குறித்து ஆசிப் அளித்த தகவல்கள் முரண்பட்டதாக இருந்தது.
மேலும், அவரது பெயர், முகவரியை மாற்றி மாற்றி தெரிவித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த டாக்டர்கள், ‘ குண்டு காயத்துடன் ஒரு நபர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்' என்ற தகவலை போலீசாருக்கு தெரிவித்தனர்.
இதையடுத்து மருத்துவமனைக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்த போலீசார், பின்னர் மப்டி உடையில் வந்து ஆசிப்பிடம் விசாரித்தனர். ஆனால், அவர் கூறிய தகவல்கள் சந்தேகம் அளிக்கவே, ஆசிப்பை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரித்தனர். அப்போது, அவருடன் மேலும் 2 தீவிரவாதிகள் தங்கி இருந்ததும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து ஆசிப்பின் கூட்டாளிகள் 2 பேர் என மொத்தம் 3 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து கிடுக்கிப்பிடி விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் கைதான தீவிரவாதிகள் மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும் அங்குள்ள சிறையில் இருந்து தப்பியவர்கள் என்றும் இவர்களுக்கும் உத்தரபிரதேச மாநில சிமி அமைப்பை சேர்ந்தவர்களுடன் தொடர்பு இருப்பதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பில் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் கைது செய்யப்பட்ட மூன்று பேருக்கும் சென்ட்ரல் ரயில் நிலைய குண்டு வெடிப்பிற்கும் தொடர்பு இல்லை என்றும் போலீசார் உறுதிபடுத்தியுள்ளனர்.
மேலும் இவர்கள் 3 பேரும் வழிப்பறி, கொள்ளையில் ஈடுபட்டு வந்ததும், அதன் மூலம் கிடைக்கும் பொருட்கள், பணத்தை தீவிரவாத இயக்கத்திற்கு அனுப்பிவைத்திருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து மராட்டியம், தமிழ்நாடு, ஆந்திரா, மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த போலீசாரும், மத்திய புலனாய்வு பிரிவு போலீசாரும் கைதான தீவிரவாதிகள் பற்றிய தகவல்களை சேகரித்து வருகிறார்கள்.
இதற்கிடையே தார்வார் டவுனில் ரயில் நிலையம் பின்புறம் உள்ள தேஜஸ்வினி நகரில் தீவிரவாதிகள் 3 பேரும் வாடகைக்கு தங்கியிருந்த சிவாஜி குல்கர்னி என்பவரது வீட்டிலும், அதையொட்டி உள்ள வீடுகளில் வசிப்பவர்களிடமும் தார்வார் சிறப்பு புலனாய்வு குழுவினர் கடந்த 2 நாட்களாக தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அதே போல் ஞாயிறன்றும் தொடர்ந்து சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தினர்.
அப்போது, 3 தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் பற்றியும், அவர்களது வீட்டிற்கு யார்-யார்? வந்து சென்றார்கள்? அவர்கள் வீட்டில் இருந்து எப்போது சென்று வந்தார்கள்? என்பது குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். அதேப் போல் தீவிரவாதிகள் அடிக்கடி சென்று வந்த தேஜஸ்வினி நகரில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் மையத்தின் கம்ப்யூட்டர்களையும் தொழில்நுட்ப பிரிவு போலீசார் தீவிர ஆய்வு செய்து வருகிறார்கள்.