வெள்ளக் காக்கா மல்லாக்கப் பறக்குது.. மெட்ரோ ரயிலை அண்ணாந்து பார்த்து "அட" போட்ட சென்னை மக்கள்!
சென்னை: வரும் ஆனா வராது என்றெல்லாம் கேலி பேசப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் ஒரு வழியாக சென்னை மக்கள் மத்தியில் சர் புர்ரென்று புகுந்து புறப்பட்டு போய்க் கொண்டிருக்கிறது. சென்னை முழுவதும் இன்று மெட்ரோ ரயில் குறித்த பேச்சுத்தான்.
சென்னையில் மெட்ரோ ரயில் வருகையால் போக்குவரத்து நெருக்கடி கணிசமாக குறையும் என்ற எதிர்பார்ப்பில் அனைவரும் உள்னர்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் முதல்வர் ஜெயலலிதா கோயம்பேடு - ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் சேவையை இன்று தொடங்கி வைத்தார். வழக்கம் போல வீடியோ கான்பரன்சிங் மூலமாக அவர் திறந்து வைத்தார்.
5வது நகரம்
இதன் மூலம் கொல்கத்தா, டெல்லி, மும்பை, பெங்களூர் மெட்ரோ வரிசையில் சென்னை மெட்ரோ ரயிலும் இணைந்துள்ளது. இன்றைய மெட்ரோ ரயில் மெய்டன் ரைடு குறித்த ஒரு தகவல் உலா...
ஹெல்ப் லைன்
சென்னை மெட்ரோ ரயில் குறித்த விவரம், புகார் உள்ளிட்டவற்றைப் பற்றி தெரிவிக்க தெரிந்து கொள்ள புதிய ஹெல்ப்லைன் எண் கொடுத்துள்ளனர். அது - 18604251515.
ஜில்லிட்ட ஏசி பெட்டிகள்
முதல் முறையாக மெட்ரோவில் பயணம் செய்த மக்களுக்கு ஏசி பெட்டிகள் குதூகலத்தைக் கொடுத்தன
அண்ணாந்து பார்த்து ஆச்சரியம்
மேலே விர்ரென்று பாய்ந்து சென்ற மெட்ரோ ரயிலைப் பார்த்து கீ்ழே சாலையி்ல் போனவர்கள் பிரமிப்புடன் அண்ணாந்து பார்த்து மகிழ்ந்தனர். அதேபோல மேலே இருந்து கீழே பார்த்து மெட்ரோ பயணிகள் மகிழ்ந்தனர்.
மணிக்கு 35 கிலோமீட்டர்
தற்போது ஒரு ரயிலில் 1200 பயணிகளை ஏற்ற முடியும். சாதாரண ஸ்பீடு மணிக்கு 35 கிலோமீட்டர் ஆகும். அதிகபட்சம் 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல முடியும். ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் அதிகபட்சம் 30 விநாடி வரை ரயில் நிற்கும்.
டிரைவருக்கு ஏதாவது ஏற்பட்டால்
ரயிலில் ஏதாவது அவசர நிலை ஏற்பட்டால் நேரடியாக ரயில் ஓட்டுநரை பயணிகளால் தொடர்பு கொள்ள முடியும். ரயில் போகும்போது திடீரென டிரைவருக்கு ஏதாவது ஏற்பட்டு விட்டால் ரயில் தானாகவே அவசர கால பிரேக்கைப் பயன்படுத்தி நின்று விடும்.
இரண்டு விதமான மோடுகள்
இந்த ரயில் இருவிதமான மோடுகளில் செயல்படும். அதாவது ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல். டிரைவரே இல்லாமல் இந்த ரயில்களை இயக்க முடியும். இருப்பினும் இப்போதைக்கு டிரைவர்களை கொண்டே ரயில் இயக்கப்படும்.
மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு வசதிகள்
ரயிலில் மாற்றுத் திறனாளிகள் யாரேனும் பயணம் செய்தால் அவர்கள் கீழே இறங்க, ஏற நேரம் ஆகும். அப்படிப்பட்டவர்கள் வசதிக்காக ஒரு பட்டன் வைக்கப்பட்டுள்ளது. அதை அழுத்தினால் ரயில் வழக்கமாக நிற்கும் நேரத்தை விட சற்று கூடுதல் விநாடிகளுக்கு நிற்கும். மேலும் அனைத்துப் பெட்டிகளிலும் வீல் சேர்களும் உள்ளன.
டெல்லி போலவே
டெல்லி மெட்ரோவில் உள்ளதைப் போலவே சென்னை மெட்ரோவின் ரயில் பெட்டிகளும் உள்ளன. இருப்பினும் சென்னை ரயில்களில் சில கூடுதல் அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வேடிக்கை பார்க்கப் போலாமா
சென்னையில் ஏற்கனவே பல சுற்றுலா அம்சங்கள் உள்ளன. இப்போது அதில் மெட்ரோவும் சேர்ந்து விட்டது. இனிமேல் மெட்ரோவையும் வேடிக்கை பார்க்க, அதில் அமர்ந்து பயணம் செய்ய மக்கள் அலை மோதுவார்கள் என்று தெரிகிறது.