சென்னையில் இடியுடன் கனமழை- மேலடுக்குச் சுழற்சியால் 2 நாட்களுக்கு மழை பெய்யுமாம்!
சென்னை: சென்னையில் திடீரென காற்று மற்றும் இடியுடன் கனமழை பெய்ததால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்தது.
ஆந்திராவை ஒட்டியுள்ள வங்கக்கடலில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென் தமிழகத்தில் குமரி அருகே வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி உருவாகி உள்ளதால் மழை நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அவ்வப்போது இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
இந்த நிலையில் சென்னையில் பிற்பகல் 1 மணியளவில் சாரல் மழையாக தொடங்கி திடீரென இடியுடன் கனமழை கொட்டியது. சென்னையில் மயிலாப்பூர், மந்தைவெளி, பட்டினப்பாக்கம், சேப்பாக்கம், ஈக்காட்டுதாங்கல், கிண்டி, முகப்பேர், திருவேற்காடு, உள்ளிட்ட இடங்களில் கனமழை கொட்டியது.
தாம்பரம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் ஒரு மணிநேரம் காற்றுடன் பலத்த மழை பெய்கிறது. காற்றுடன் கனமழை கொட்டியதால் சில இடங்களில் மின்தடை ஏற்பட்டது.
திடீர் மழையால் சாலைகளில் வெள்ளநீர் தேங்கியது. பள்ளிகளுக்கு சென்ற மாணவர்கள் வெள்ள நீரில் நடந்து வீடு வந்து சேர்ந்தனர். தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் தஞ்சை, மயிலாடுதுறையில் அதிகபட்சமாக 11 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. ஜெயங்கொண்டம், கந்தர்வக்கோட்டையில் 9 செ.மீ. மழையும், பெருங்காலூர், கடலூர், பண்ருட்டியில் 7 செ.மீ. மழை பெய்துள்ளது. மன்னார்குடி, கல்லணை, நெ்துறையில் தலா 5செ.மீ. மைாயும் பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த காஞ்சிபுரம், தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும், மதுரை, திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அரைமணி நேரத்திற்கும் மேலாக நல்ல மழை பெய்தது. திருப்பூர், அவினாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளும் பலத்த மழை பெய்தததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.