வேலை தர்றேன்... காசு தாங்க... காதல் வலை வீசி இளைஞர்களைக் காலி செய்த மோசடி ராணி!
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 12 லட்சம் மோசடி செய்த பட்டதாரிப் பெண் அனிதாவை போலீசார் கைது செய்து, புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் அனிதா(26). பிசிஏ பட்டதாரியான இவர் முதல் கணவரை விவாகரத்து மூலம் பிரிந்தார். தற்போது இரண்டாவது கணவருடன் வாழ்ந்து வரும் அனிதாவிற்கு ஒன்றரை வயதில் மகன் உள்ளான்.
சென்னை ஐகோர்ட்டில் வேலை வாங்கித்தருவதாக 12 லட்சம் சுருட்டிய மோசடி ராணி கைது செய்யப்பட்டார். அவரிடம் பணத்தை இழந்து ஏமாந்த அப்பாவி இளைஞர்களிடம் காதல் லீலையிலும் ஈடுபட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், அனிதா மீது சென்னை ஹைகோர் காவல் நிலையத்தில் மலையரசன் உட்பட 4 இளைஞர்கள் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தனர். அதில், ‘சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி தங்களிடம் தலா ரூ. 3 லட்சம் வீதம் மொத்தம் ரூ. 12 லட்சத்தை அனிதா மோசடி செய்து விட்டதாக' அவர்கள் கூறியிருந்தனர்.
அதோடு, வேலையும் வாங்கித் தராமல், பணத்தைத் திருப்பிக் கேட்டால் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் அவர்கள் அனிதா மீது குற்றம் சாட்டியிருந்தனர்.
இந்த புகார் மனு மீது ஹைகோர்ட் உதவி கமிஷனர் கண்ணன் மேற்பார்வையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அனிதா மீது மோசடி மற்றும் கொலைமிரட்டல் சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
விசாரணைக்கு அழைத்த போது, சொகுசு காரில் வந்துள்ளார் அனிதா. அப்போது தனது தந்தை அருப்புக்கோட்டையில் துணி மில் முதலாளியாக இருப்பதாகவும், தானும் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் மாதம் ரூ.2 லட்சம் சம்பளத்தில் வேலைபார்ப்பதாகவும், மோசடி எதிலும் தான் ஈடுபடவில்லை என்றும் போலீசாரிடம் அவர் கூறினார்.
ஆனால், புகார் கூறிய இளைஞர்களிடமிருந்து வங்கிக் கணக்கு மூலம் பணம் பெற்றுள்ளார் அனிதா. இது அவருக்கு எதிரான வலுவான ஆதாரமாக மாறியது.
அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் போலீசார் அனிதாவை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது, மேலும் பல பரபரப்பு தகவல்கள் வெளியானது.
அனிதா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை ஹைகோர்ட் வக்கீல்கள் சிலரும் போலீசாரை வற்புறுத்தினார்கள். அதில், சுரேஷ்குமார் என்ற வக்கீல் அனிதாவின் மோசடி மற்றும் காதல் லீலைகள் பற்றி திடுக்கிடும் தகவல்களை போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளாராம்.
அதாவது, தற்போது அனிதா மீது 4 பேர் மட்டுமே புகார் கொடுத்துள்ளனர். ஆனால், அவரிடம் வேலைவாய்ப்பு கேட்டு லட்சக்கணக்கில் பணம் கொடுத்து ஏராளமான இளைஞர்கள் ஏமாந்துள்ளதாகத் தெரிகிறது.
இது தொடர்பான பட்டியலை வழக்கறிஞர்கள் தயாரித்து வருகின்றனராம். மொத்தமாக அவர் ரூ. 50 லட்சம் வரை மோசடி செய்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மோசடிப் பணத்தில் அவர் பெரும்பாக்கத்தில் ஒரு வீடு கட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.
வேலை வாங்கித் தருவதாக மட்டுமின்றி, இளைஞர்களை காதல் என்ற பெயரிலும் அனிதா ஏமாற்றி வந்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பேருந்து நிலையம், ரயில் நிலையம் போன்ற இடங்களில் நின்று இளைஞர்களுக்கு காதல் வலை வீசுவாராம். அதில் சிக்கும் இளைஞர்களிடம் ஒரு மாதம் நெருக்கமாக பழகுவாராம் அனிதா. சிலரை ரகசியத் திருமணம் கூட செய்துள்ளதாகத் தெரிகிறது.
எப்போதும் அனிதா கைவசம் ஒரு தங்கச்சங்கிலி இருக்குமாம். அதனை கேரளாவில் பூஜை செய்தது எனக் கூறி, அதனை தனக்கு தாலியாக கட்டச் சொல்லுவாராம். பின்னர் அந்த இளைஞர்கள் மூலம் அவர்களது நண்பர்களிடம் பெரிய கம்ப்யூட்டர் நிறுவனங்களில் வேலை வாங்கித்தருவதாக பணம் கேட்பது அனிதாவின் தந்திரம். இதுபோல அவர் ஏராளமான இளைஞர்களிடம் பணம் வாங்கி மோசடி செய்துள்ளதாகத் தெரிகிறது.
சமீபத்தில் மழைவெள்ளம் ஏற்பட்டதால், தனது பழைய தந்திரத்தை மாற்றி, ஹைகோர்ட்டில் வேலை வாங்கித்தருவதாக இளைஞர்களை அவர் ஏமாற்றி வந்துள்ளார்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள அனிதா நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
எனவே, திடுக்கிடும் பல உண்மைகள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.