சாப்பிட்டுவிட்டு கைகழுவியபோது கணவன் கண்முன்பு ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண் பலி
கோவை: கோவையில் ஓடும் ரயிலில் சாப்பிட்டுவிட்டு கை கழுவிக் கொண்டிருக்கையில் தவறி கீழே விழுந்த பெண் பலியானார்.
சென்னை திருவான்மியூரைச் சேர்ந்தவர்கள் ஜெய்சங்கர்(50), அவருடைய மனைவி சுமதி(45). அவர்கள் பாலக்காடு செல்ல சென்னையில் இருந்து கிளம்பிய வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறினர்.
ரயில் நேற்று முன்தினம் காலை 8.40 மணி அளவில் கோவை ரயில் நிலையத்தை அடைந்துவிட்டு அங்கிருந்து கிளம்பியது. காலை உணவை சாப்பிட்ட கணவனும், மனைவியும் கை கழுவ வாஷ்பேசினுக்கு சென்றனர்.
கதவுக்கு அருகே இருந்த வாஷ்பேசினில் சுமதி கை கழுவிக் கொண்டிருந்தார். அவருக்கு பின்னால் ஜெய்சங்கர் நின்று கொண்டிருந்தார். அந்த பெட்டியின் கதவு திறந்து கிடந்தது. இந்நிலையில் சுமதி தவறி ரயிலில் இருந்து கீழே விழுந்தார். இதை பார்த்த ஜெய்சங்கர் அதிரிச்சி அடைந்து அழுதார். ரயிலை நிறுத்த முடியாமல் அங்கு இங்கும் அழுதபடி அலைந்தார்.
இந்நிலையில் ரயில் பாலக்காட்டை அடைந்தது. உடனே அவர் பாலக்காட்டில் இருந்து டாக்சி மூலம் கோவை வந்து போத்தனூர் ரயில் நிலைய போலீசாரிடம் நடந்தது பற்றி தெரிவித்தார். போலீசார் சுமதியை தேடியபோது ஈச்சனாரியில் உள்ள தனியார் கல்லூரிக்கு பின்புறம் உள்ள ரயில் தண்டவாளத்தில் அவர் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவரது உடலை மீட்ட போலீசார் அதை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.