நாடா புயல் தாக்குமா.. வெள்ளம் வருமா.. கனமழையை சமாளிப்பது எப்படி
நாடா புயல் வரும் என்ற அறிவிப்பும் அதனைத் தொடர்ந்து கனமழை பொழியும் என்ற அறிவிப்பும் மக்களிடையே ஒரு வித அச்சத்தை உருவாக்கியுள்ளது.
சென்னை: நாடா புயல் உருவாகியுள்ளது. சென்ற ஆண்டைப் போன்று இந்த ஆண்டும் சென்னையை மழையும் வெள்ளமும் தாக்கு தாக்கென்று தாக்கினால் என்ன செய்வது என்ற குழப்பம் சென்னைவாசிகளிடம் இருக்கிறது. இருந்தாலும் கரையோரவாசிகள், அடுக்குமாடிவாசிகள், என ஒவ்வொரு தரப்பினரும் ஒவ்வொரு விதமாக மழையை எதிர்க் கொள்ள தயாராகி வருகின்றனர்.
சென்ற ஆண்டு கனமழை டிசம்பர் 1ம் தேதி தொடங்கியது. கொட்டித் தீர்த்த கனமழையால் நிரம்பி வழிந்த செம்பரம்பாக்கம் ஏரி உடைந்து சென்னையை மிதக்க விட்டது. இதனால் சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மக்கள் ஒரே நாளில் அகதிகள் போல் உண்ண உணவின்றி உடுக்க உடையின்றி, படுக்க இடம் இன்றி நடுரோட்டில் தவித்தனர். கடந்த ஆண்டு போன்றே இந்த ஆண்டும் அதே டிசம்பர் 1ம் நாளில் கனமழையும் புயலும் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் உருவாகியுள்ள ‛நாடா' என்று பெயரிடப்பட்டுள்ள புயல் டிசம்பர் மாதம் 2ம் தேதி புதுச்சேரி மற்றும் வேதாரண்யம் இடையே, கடலுர் அருகில் கரையைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் நாளை அதிகாலை முதல் மழை பெய்ய துவங்கும். பின், படிப்படியாக அதன் தீவிரம் அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் கனமழை பெய்யும் என்று சொன்னாலும் அது எவ்வளவு என்பது பற்றிய துல்லியத் தகவல்கள் நம்பிடம் இல்லை. இதனால் பலர் சென்ற ஆண்டைப் போன்று ஒரு பேரழிவு நிகழுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.
மூட்டை கட்டியுள்ள கரையோர மக்கள்
நாளையில் இருந்து மழை தொடங்க போகிறது என்றும் அது புயலாக மாறி கரையை கடக்கப் போகிறது என்றதும் முதலில் அச்சத்தில் ஆழ்ந்துள்ள மக்கள் கரையோர மக்கள்தான். அடையாறு மற்றும் கூவம் கரைகளின் ஓரம் உள்ள மக்களுக்கு மழை பயம் அதிகரித்துள்ளது. அவர் தங்களிடம் உள்ள குடும்ப அட்டை, ஆதார் அட்டை, குழந்தைகளின் பள்ளிச் சான்றிதழ்கள், மின்சார அட்டை உள்ளவற்றை பத்திரமாக எடுத்து தனியாக வைத்துள்ளனர். திடீரென வெள்ளம் ஏற்பட்டால் இவற்றை முதலில் காப்பாற்ற வேண்டும் என்ற அடிப்படையில் அவர்கள் அவற்றை பிளாஸ்டிக் உரைகளில் போட்டு தனியாக எடுத்து வைத்துள்ளனர். மேலும், அன்றாட பயன்பாட்டிற்கு தேவையான பாத்திரங்கள் துணி மணிகள் தவிர மற்ற முக்கியமான பொருட்களை மூட்டைக் கட்டி எடுத்துச் செல்வதற்கு தயாராக வைத்துள்ளனர்.
அடுக்குமாடி வாசிகள் மழையை எதிர்க் கொள்வது எப்படி?
கடந்த ஆண்டு மழை மற்றும் வெள்ளத்தால் தாம்பரம், பெருங்களத்தூர், வேளச்சேரி என பல்வேறு பகுதியில் 2 அடுக்கு மாடி வரை மழை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் சொந்த வீட்டுக்காரர்கள் அனைவரும் மொட்டை மாடிகளில் தஞ்சம் புகுந்தனர். அது போன்ற நிலை தற்போது ஏற்பட்டுவிட்டால் என்ன செய்வது என்று முன் கூட்டியே அடுக்குமாடி வாசிகள் தங்களை தயார்படுத்தி வருகின்றனர். தரை தளத்தில் இருப்பவர்கள் 3வது மாடியில் குடியிருக்கும் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் முக்கியமான வீடு தொடர்பான ஆவணங்களை கொடுத்து வைத்து வருகின்றனர். உணவிற்கு பிஸ்கேட் போன்ற நீண்ட கெடாமல் உள்ள பொருட்களை வாங்கி வைத்து வருகின்றனர்.
பள்ளிக் கூட விடுமுறை
மழை, வெள்ளம் என்பது பற்றி எல்லாம் பெரியவர்களுக்குத்தான் கவலை. சிறியவர்களுக்கு அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. எப்போது மழை வரும், எப்போது விடுமுறை அறிவிப்பார்கள் என்று காத்திருப்பார்கள். அந்த வகையில் மாணவர்கள் விடுமுறையை எதிர் நோக்கி இருந்தாலும், கடந்த முறை போல தங்களது புத்தகங்களை வெள்ளத்திற்கு கொடுத்துவிட்டு தேர்வு நேரங்களில் கஷ்டப்படாமல் இருக்க புத்தகங்களை பத்திரப்படுத்தி வருகின்றனர்.