பொங்கல் பானை கருகிப் போவது கூட தெரியாமல் செல்பி எடுத்து பொங்கல் கொண்டாடிய மாணவிகள்!
சென்னை: பொங்கல் வந்து விட்டது. விடிந்தால் போகி.. பழையவற்றை கழித்து புதியவற்றை வரவேற்கும் நாள். அதைத் தொடர்ந்து தைப் பொங்கல். தொடர்ந்து மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என மக்கள் கொண்டாட்டத்திற்குத் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் சென்னையிலும் இன்று கல்லூரி மாணவிகள் பொங்கல் பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
கடந்த காலங்களை விட சமீப ஆண்டுகளாக நகரத்து கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவது அதிகரித்து வருகிறது. மாணவ, மாணவியருக்கு நமது பாரம்பரியத்தை நினைவூட்டும் வகையில் இந்த பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டத்திற்கு பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள் வழி ஏற்படுத்தித் தருகின்றன.
அந்த வகையில் இன்று சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் மாணவிகள் இணைந்து பொங்கலை பட்டையக் கிளப்பும் வகையில் கொண்டாடி மகிழ்ந்தனர்.
பெரம்பூர்
சென்னை பெரம்பூரில் உள்ள செவாலியர் டி. தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரி. இங்குதான் கொண்டாட்டம் களை கட்டியிருந்தது.
மாட்டு வண்டி கட்டிக்கிட்டு
மாட்டு வண்டி ஒன்றை இதற்காக ஏற்பாடு செய்து உலா வர விட்டிருந்தார்கள். காளையர்கள் உள்ளே வர முடியாத இந்த கல்லூரிக்குள் ஒற்றைக் காளை பூட்டப்பட்ட மாட்டு வண்டி மாணவிகளுக்காக பிரத்யேக சவாரிக்காக அழைத்து வரப்பட்டிருந்தது.
ஏ செல்வி செல்பி எடு
மாட்டு வண்டியில் மாணவிகள் குரூப் குரூப்பாக சவாரி செய்தனர். கூடவே செல்பிகளையும் எடுத்துத் தள்ளினர்.
கொசுவம் வைத்த புடவை கட்டி
அடுத்து பொங்கல் வைக்கும் வைபவம். கல்லூரி மைதானத்தில் கூடி மாணவிகள் பொங்கல் வைத்தனர். கொசுவம் வைத்த புடவை கட்டி ஒரே மாதிரியான புடவையில் வந்திருந்த மாணவிகள் உற்சாகமாக பொங்கல் வைத்தனர்.
குலவையிட்ட குமரிகள்
பொங்கல் பொங்கி வந்தபோது குலவையிடத் தெரிந்த அல்லது இதற்காகவே பிரத்யேகமாக பயிற்சி பெற்ற மாணவிகள் சிரித்தபடியும், உற்சாகமாகவும் குலவையிட்டு அசத்தினர்.
பானை கருகுதும்மா
பொங்கல் வெந்து கொண்டிருந்தபோது அப்போதும் செல்பி மோகம் விடாத சில "செல்விகள்" பொங்கல் பானை கருகிப் போனது கூட தெரியாமல் குரூப் குரூப்பாக செல்பி எடுத்து சந்தோஷித்தனர்.
புகை கண்ணைக் கட்டுதே
நீல நிறப் புடவை கட்டிய இன்னொரு குரூப் தனியாக பொங்கல் வைத்தது. அவர்களில் சிலருக்கு புகை கண்ணை மூடவே இருந்தாலும் விடாமல் ஊதுகுழலை எடுத்து ஊதி புகையை கட்டுப்படுத்தி தீயை மட்டுப்படுத்தினர்.
இதுதான் பொங்கல்
சிலர் பொங்கல் வைத்தபோது கூடிப் பேசி பொங்கல் வைப்பது குறித்தும் பொங்கல் பண்டிகை குறித்தும் பேசி மகிழ்ந்தனர்.
மொத்தத்தில் சந்தோஷமாகவும், நல்ல அனுபவம் தரும் விதமாகவும், நமது பாரம்பரியம் கலாச்சாரம் குறித்து அறிந்து கொள்ளும் பாடமாகவும் இந்த பொங்கல் கொண்டாட்டம் மாணவிகளுக்கு அமைந்தது.