வேலூர் அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த இரண்டரை வயது சிறுவன் பரிதாப சாவு! 9 மணி நேர போராட்டம் வீண்
வேலூர்: வேலூர் அருகே, 300 அடி போர்வெல் உள்ளே விழுந்த இரண்டரை வயது சிறுவன் 9 மணி நேர போராட்டத்துக்கு பிறகு உயிரோடு மீட்கப்பட்டாலும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தான்.
வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகேயுள்ளது கூராம்பாடி கிராமம். இங்கு, விவசாய நிலத்தில் தண்ணீருக்காக தோண்டப்பட்ட ஆழ்துளை கிணறு ஒன்று மூடப்படாமல் விடப்பட்டிருந்தது.
இந்த கிணற்றில் எதிர்பாராத விதமாக, சாம்பசிவபுரம் என்ற ஊரை சேர்ந்த இரண்டரை வயதான தமிழரசன் என்ற சிறுவன் விழுந்துள்ளான். குழந்தை விளையாடிக் கொண்டிருந்த போது, திடீரென ஆழ்துளை கிணற்றில் விழுந்ததாக கூறப்படுகிறது.
சாம்பசிவபுரத்தை சேர்ந்த குட்டி, கீதா தம்பதிகளின் மகன் இந்த தமிழரசன். குட்டி வெளிநாட்டில் வேலை பார்க்கும் நிலையில், தனது தாத்தா வீடு இருக்கும் கூராம்பாடிக்கு, தாய் கீதாவுடன் வந்திருந்தான் தமிழரசன். அப்போதுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த கிணறு சுமார் 300 அடி ஆழமுள்ளது என்று தெரிகிறது. 20வது அடியில், குழந்தை சிக்கியுள்ளதாக சந்தேகிக்கப்பட்டது. எனவே, தமிழரசனை மீட்க தீயணைப்பு வீரர்கள், மருத்துவ குழுவினர் காலை 8.30 மணி முதல் போராட்டம் நடத்தினர். சிறுவனுக்கு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் ஆக்ஸிஜன் வழங்கப்பட்டு வந்தது.
குழந்தையை மீட்பதற்காக 3 ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன், ஆழ்துளை கிணற்றுக்கு அருகே பள்ளம் தோண்டப்பட்டது. திருச்சியில் இருந்து செயற்கை கரங்கள் கொண்டு வரப்பட்டும் மீட்பு பணி நடந்தது.
இதனிடையே 9 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மாலை 5.30 மணியளவில் சிறுவன் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டான். அப்போது சிறுவன் உடலில் உயிர் இருந்ததை மருத்துவர் குழு உறுதி செய்தது. இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி சிறுவன் தமிழரசன் உயிரிழந்தான். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.