6 பேர் உடல் மறுபிரேத பரிசோதனை முடிந்தது: புதைக்கப்பட்ட ஐவரின் உடலை தோண்ட முடிவு
திருவண்ணாமலை: ஆந்திராவில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்களில் 6 பேரின் உடல்கள் இன்று திருவண்ணாமலையில் மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
ஆந்திரா உயர்நீதிமன்ற உத்தரவின்படி, திருவண்ணாமலைக்கு வந்த தெலுங்கானாவின் உஸ்மானியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவ வல்லுநர்கள் குழு 6 பேரின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்தனர்.
திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் கடந்த 7-ந் தேதி திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த20 தொழிலாளர்கள் ஆந்திர போலீஸாரால் என்கவுன்ட்டர் என்ற பெயரில் படுகொலை செய்யப்பட்டனர்.
இதில், முனியம்மாள் தனது கணவர் சசிகுமார் சாவில் மர்மம் இருப்பதாகவும், உடலில் பல இடங்களில் மர்ம காயங்கள் இருப்பதால் மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் ஆந்திர உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இது குறித்து விசாரணை நடத்திய நீதிமன்றம், சசிகுமாரின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டது.
இந்நிலையில், சுட்டுக் கொல்லப்பட்ட திருவண்ணாமலை மாவட்டம் வேட்டகிரிபாளையத்தை சேர்ந்த முருகன், பெருமாள், காந்தி நகரை சேர்ந்த மகேந்திரன் மற்றும் முருகபாடியை சேர்ந்த முனுசாமி, மூர்த்தி ஆகிய மேலும் 5 பேரின் உறவினர்களும் மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிடக் கோரி ஆந்திரா உயர்நீதிமன்றத்தை நாடினர். இதனை விசாரித்த ஆந்திரா உயர்நீதிமன்றம், முருகன், பெருமாள், மகேந்திரன், முனுசாமி மற்றும் மூர்த்தி ஆகிய 5 பேரின் சடலங்களையும் மறுபிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டது.
யார் நடத்துவது?
இருப்பினும் இந்த பிரேத பரிசோதனையை நடத்தப் போகும் மருத்துவர்கள் என்ற கேள்வி எழுந்தது. ஆந்திராவைச் சேர்ந்த மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்ய சுட்டுக்கொல்லப்பட்டோரின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தமிழகம், ஆந்திரா மருத்துவர்கள் அல்லாது தெலுங்கானாவின் உஸ்மானியா பல்கலைக் கழக மருத்துவர்களைக் கொண்டு பிரேத பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது.
எங்கே நடத்துவது?
ஆனால் இந்த பிரேத பரிசோதனையை எங்கே நடத்துவது? எந்த மருத்துவர்கள் நடத்துவது என்பதில் குழப்பம் ஏற்பட்டது. ஆந்திரா உயர்நீதிமன்றம் பாதுகாப்பு காரணங்களுக்காக சென்னையில் பிரேத பரிசோதனை நடத்த முதலில் உத்தரவிட்டிருந்தது. சுட்டுக் கொல்லப்பட்டோரின் உறவினர்களோ திருவண்ணாமலையில் உடல்கள் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதால் சென்னைக்கு கொண்டு செல்லவதில் நடைமுறைச் சிக்கல் இருக்கும் என்று தெரிவித்தனர். மேலும் தெலுங்கானா மருத்துவர்களோ தாங்கள் திருவண்ணாமலைக்கு செல்ல தயார் என்றும் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலையிலேயே பிரேத பரிசோதனை நடத்த முடிவானது.
மருத்துவக்குழுவினர் வருகை
இந்நிலையில், பிற்பகல் 2 மணிக்கு உஸ்மானியா பல்கலைக்கழக மருத்துவர் தாக்கியூதீன் கான் தலைமையில் அதே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் அபிஜித் குப்தா, கே.வி.ரமணமூர்த்தி ஆகியோரும், திருப்பதி அரசு மருத்துவமனையில் 6 சடலங்களையும் ஏற்கெனவே பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் இந்திராணி, ராம்மோகன், எஸ்.என்.ராவ், சாய் பிரசாத், பாஸ்கர், நாகராஜூ, துர்கா பிரசாத், பி.ஆர்.சி.மோகன், ஜி.பி.சீனிவாஸ் ஆகியோர் உள்பட மொத்தம் 12 பேர் கொண்ட குழு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்தடைந்தது.
பிரேத பரிசோதனை முடிந்தது
இதையடுத்து, பிற்பகல் 2.10 முதல் மாலை 4 மணி வரை களம்பூரான்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை மகன் சசிகுமாரின் சடலம் மறு பிரேதப் பரிசோதனை செய்து முடிக்கப்பட்டது. 2-வதாக, வேட்டகிரிபாளையம் கிராமம், கிருஷ்ணன் மகன் பெருமாளின் சடலம் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. இதையடுத்து முருகாபாடி கிராமம், கொல்லைமேடு, கோபால் மகன் முனுசாமியின் சடலத்தை பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. வரிசையாக 6 பேரின் சடலங்களும் இன்றைக்கே மறு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. இதனையடுத்து மருத்துவமனையில் இறந்தவர்களின் உறவினர்கள் காத்திருந்தனர். இதனையடுத்து மருத்துவமனையில் மூன்றடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
உண்மை வெளிவரும்
இதனிடையே இந்த பிரேத பரிசோதனை சரியாக நடத்தப்பட்டு முத்திரையிடப்பட்ட கவரில் ஆந்திரா உயர்நீதிமன்றத்திற்கு மட்டுமே வழங்கவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த மறுபிரேத பரிசோதனை அறிக்கையின் மூலம் தங்களுக்கு நீதி கிடைக்கும் என்று சுட்டுக் கொல்லப்பட்டோரின் உறவினர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மேலும் 5 பேரின் உடல்கள்
இந்த 6 பேரின் உடல்கள் தவிர பழனி என்பவரது உடல் தகனம் செய்யப்பட்டது. மேலும் ஜவ்வாதுமலை பகுதியை சேர்ந்த மேல்குஷ்னாவூர் பன்னீர்செல்வம் (25), கோவிந்தசாமி (38), வெள்ளிமுத்து (22), சின்னசாமி (47), ராஜேந்திரன் ஆகியோர் உடல் புதைக்கப்பட்டுள்ளன. புதைக்கப்பட்ட உடல்களை மறுபிரேத பரிசோதனையிட அவர்கள் முடிவு செய்துள்ளனர். வருகிற திங்கட்கிழமை இதற்காக ஆந்திர உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய போவதாக தெரிவித்துள்ளனர். நீதிமன்றம் உத்தரவிட்டால் புதைக்கப்பட்ட 5 பேர் உடல்களும் தோண்டி எடுக்கப்பட்டு மறுபிரேத பரிசோதனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.