துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி கவலைக்கிடம்.... மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
சென்னை : துக்ளக் பத்திரிகை ஆசிரியர் சோ ராமசாமி மிகவும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மூச்சுத் திணறல் மற்றும் நுரையீரல் பாதிப்பு காரணமாக சோ சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
அவரை கடந்த மாதம் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
முன்னதாக நெசவாளர் தின விழாவில் கலந்து கொள்ள சென்னை வந்திருந்த பிரதமர் மோடியும் சோ ராமசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தார்.
தொடர்ந்து சோ மருத்துவர்களின் கண்காணிப்பிலேயே இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று சோ ராமசாமியின் உடல் நிலை மிகவும் மோசமடைந்ததையடுத்து, மிகவும் ஆபத்தான நிலையில், ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.