ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது - துக்ளக் விழாவில் ரஜினி வேதனை
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: தை பொங்கல் தினத்தன்று சென்னையில் 'துக்ளக்' இதழின் ஆண்டுவிழா நடைபெறுவது வழக்கம். அதில் கலந்து கொண்டு அப்பத்திரிக்கையின் ஆசிரியர் சோ உரையாற்றுவார். கடந்த மாதம் அவர் மறைந்து விட்ட நிலையில் துக்ளக் பத்திரிக்கையின் 47ஆவது ஆண்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது.
இதில் துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் தமிழிசை ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றார்.
ரஜினி ரசிகர்கள் பலரும் நாளைய முதல்வரே என்று போஸ்டர்கள் ஒட்டியிருந்தனர். ரஜினிகாந்திற்காக பேனர்களும் பிரம்மாண்டமாக வைக்கப்பட்டிருந்தன. நடிகர் ரஜினிகாந்த் இன்றைய விழாவில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுவார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். விழாவில் பேசிய ரஜினிகாந்த், சோ உடனான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். ஜெயலலிதாவிற்கும் சோ ராமசாமிக்கும் இடையேயான நட்பை பற்றி பேசினார்.
சோ இல்லாத மேடை
சோ இல்லாத இந்த மேடையில் உரையாற்ற வேண்டி வரும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. அவரது வாசகர்கள் மத்தியில் இன்று பேசுகிறேன். எனக்கு மிகவும் சிறந்த ஆலோசகர்கள் கிடைத்தார்கள். பெரிய அறிவோ, அழகோ இல்லாவிட்டாலும் எனக்கு தமிழக மக்கள் ஆதரவு கொடுத்தனர்.
சோ என்னும் அறிவாளி
சோ மாதிரி அறிவாளியான ஒருவர் எனக்கு நண்பராக கிடைத்தார். சிங்கம் மாதிரி இருந்தவர் உடல் நலமில்லாமல் இருந்ததை பார்த்த போது கஷ்டப்பட்டேன். அவர் என்னுடன் மணிக்கணக்கில் பேசுவார். அப்போது நானே என் முதுகை தட்டிக்கொடுத்துக்கொள்வேன்.
சோ - ஜெயலலிதா நட்பு
அவர் மருத்துவமனையில் இருந்த பொழுது சென்று பார்த்த பொழுது மிகவும் கஷ்டமாக இருந்தது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்த பொழுது சோவை மருத்துவமையில் சென்று பார்த்தார். அப்பொழுது அவர் நான் இருக்கிற வரைக்கும் நீங்க இருக்கணும் என்று கேட்டுக்கொண்டார். அவர் கூறியது மாதிரியே ஜெயலலிதா உயிருடன் இருக்கும் வரை அவரும் உயிரோடு இருந்தார். அவர் மறைந்த உடன் சில மணி நேரங்களில் மறைந்து விட்டார்.
இப்போது இருந்திருந்தால்
அவர் இறந்த போது கூட மனசு கஷ்டப்படவில்லை. அந்த அளவிற்கு மனதை தயார் படுத்தி வைத்திருந்தேன். அவர் இறந்த பின்னர் இங்கு நடக்கிற சில அசாதாரண சூழ்நிலை நடப்பதை பார்க்கும் போது அவர் இல்லாததை நினைத்து மனசு கஷ்டப்படுகிறது. வேதனையாக இருக்கிறது. அவர் சிறந்த அறிவாளி, சில நேரங்களில் அப்பாவியாக பேசுவார்.
அரசியல் ஆலோசகர்
சோவிடம் வந்து ஆலோசனை கேட்காத தமிழக அரசியல்வாதிகளே இல்லையென்று கூறிவிடலாம். மாநில அரசியல்வாதிகள் மட்டும் அல்ல பிரதமர் மோடி உள்ளிட்ட தேசியத்தலைவர்களும் சிக்கலான விஷயங்களில் அவரது ஆலோசனை கேட்டு வருவார்கள். அவர் பணத்தை ஒரு பொருட்டாக மதித்ததில்லை என்றும் ரஜினிகாந்த் கூறினார்.
அசாதாரண சூழ்நிலை
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு தமிழகத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. இப்போது நிலவும் அரசியல் சூழ்நிலையில் சோ கண்டிப்பாக இங்கே இருந்திருக்க வேண்டும். சோவின் பலம் என்பது அவரது உண்மை மட்டும் தான். அதையே நாம் அவரிடம் இருந்து கற்றுக் கொண்டு பின்பற்ற வேண்டும் என்றும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.