லீவ் விட்டாச்சு… மெரினா பீச்சுக்கு படையெடுத்த மக்கள் கூட்டம்
சென்னை: பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், கிருஸ்துமஸ் பண்டிகை விடுமுறை தினத்தை முன்னிட்டும் சென்னை மெரீனா கடற்கரையில் ஏராளமான மக்கள் கூடி உற்சாகமாக பொழுதை கழித்தனர்.
தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளது. சில கல்லூரிகளுக்கு செமஸ்டர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் எத்தனையோ வணிக வளாகங்கள் இருந்தாலும் அதிகம் செலவு இல்லாத இடம் கடற்கரைகள்தான். அதிலும் மெரீனா கடற்கரையை காண மக்கள் கூட்டம் விடுமுறை நாட்களில் குவியும்.
மக்கள் கூட்டம்
புதன்கிழமை கிருஸ்துமஸ் தின விடுமுறையும் சேர்ந்து கொண்டதால் மெரினா கடற்கரைக்கு காலையில் இருந்தே மக்கள் குவியத் தொடங்கினர்.
கூட்டம் கூட்டமாக
மாலை 4 மணியளவில் மெரினாவில் எங்கும் திரும்பினாலும் மக்கள் கூட்டமாக காட்சியளித்தது. குடும்பத்தினர், மாணவர்கள், சிறுவர்கள் மற்றும் காதலர்கள் என்று எல்லா தரப்பினரும் மெரினா கடற்கரையில் திரண்டனர்.
கடலில் விளையாடி
அண்ணா சதுக்கம் முதல் நொச்சி குப்பம் வரையிலான கடற்கரை பகுதியில் மக்கள் வெள்ளம் காணப்பட்டது. கடலில் இறங்கி குளிக்க போலீசார் தடை விதித்துள்ளனர். ஆனால், தடையை மீறி குளித்தவர்களை குதிரை படையில் வந்த போலீசார் விரட்டி அடித்தனர்.
பஜ்ஜி, ஐஸ்கிரீம்
பீச்சுக்குப் போய் பஜ்ஜி சாப்பிடாமலா? கடற்கரை பகுதியில் உள்ள கடைகளில் பொறித்த மீன், பஜ்ஜி, போண்டா, ஐஸ்கிரீம் உள்ளிட்ட உணவு பொருட்கள் விற்பனையும் களை கட்டியது.
பெசன்ட் நகர் கடற்கரை
இதேபோல பெசன்ட் நகர் கடற்கரையிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதேபோல, சென்னையில் உள்ள பெரும்பாலான மாநகராட்சி பூங்காக்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.