6 ஆண்டுக்கு பின்.. கலைஞர் கருணாநிதி விருது.. விண்ணப்பிக்க அழைக்கிறது செம்மொழித் தமிழாய்வு நிறுவனம்
ஆறாண்டுகளுக்குப் பிறகு கலைஞர் கருணாநிதி பெயரிலான விருதுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்.
சென்னை: ஆறு ஆண்டுகளுக்கு பின்னர், கலைஞர் கருணாநிதி விருதுக்கான பரிந்துரைகளை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வரவேற்றுள்ளது.
இதுகுறித்து செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
2011, 2012, 2013, 2014, 2015, 2016 ஆகிய ஆண்டுகளுக்கான கலைஞர் கருணாநிதி விருது பெறுவதற்கான பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன.
உயர்ந்த விருது
10 லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஐம்பொன்னாலான கலைஞர் மு. கருணாநிதியின் உருவச்சிலை, பாராட்டு சான்றிதழ் ஆகியவை கொண்டது இந்த விருது. இந்திய நாட்டில் வழங்கப்படும் உயர்ந்த விருதுகளுள் இது ஒன்றாகும்.
யாருக்கு விருது?
செம்மொழித் தமிழாய்விற்குச் சீரிய முறையில் பங்காற்றியுள்ள அறிஞர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு இந்த விருது வழங்கப்படும். குறிப்பாக பண்டைத் தமிழ்ப்பண்பாடு, நாகரிகம் பற்றிய புதிய கருத்துக்களை வெளிப்படுத்துவதாகவும் உலக அளவில் ஏற்புடையதாகவும் அமைய வேண்டும்.
எந்தெந்த துறையில் ஆய்வு?
மேலும், தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், பண்டை இலக்கணமும் மொழியியலும், இலக்கியத் திறனாய்வு, படைப்பிலக்கியம், மொழி பெயர்ப்பு, இசை, நடனம், நாடகம், ஓவியம், சிற்பம் ஆகிய துறைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.
எந்த நாட்டைச் சேர்ந்தவர் விண்ணப்பிக்கலாம்?
தனித்தன்மை கொண்ட உலகளாவிய ஏற்பு பெற்ற ஒரு நூல் அல்லது வாழ்நாள் பங்களிப்பிற்காக இவ்விருது வழங்கப்படும். விருது பெறும் அறிஞர் எந்த நாட்டைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம்.
யார் யார் பரிந்துரைக்கலாம்?
தகுதி வாய்ந்த அறிஞர்கள், பேராசிரியர்கள், புகழ்பெற்ற அறிஞர்கள், உலக அளவிலான அல்லது தேசிய அளவிலான விருதினைப் பெற்றவர்கள், இந்த விருதுக்கு தகுதியானவரின் பெயர்களை பரிந்துரை செய்யலாம்.
பதிவிறக்கம்
ஒருவர் தம்முடைய பெயரைத் தாமே பரிந்துரை செய்யக் கூடாது. பரிந்துரைப் படிவத்தினை நிறுவனத்தின் www.cict.in என்ற இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
எந்த முகவரிக்கு அனுப்புவது?
பரிந்துரைகளை இந்த மாதம் 10ம் தேதிக்குள் இயக்குநர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், எண் 40, நூறடிச் சாலை, தரமணி, சென்னை 600 113 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கருணாநிதியின் 1 கோடி
தனது சொந்த நிதியில் இருந்து ரூ.1 கோடியை வைப்புத் தொகையாக செலுத்தி, அதில் இருந்து வரும் வட்டித்தொகையில் இருந்து ஆண்டுதோறும் விருது வழங்கும் வகையில் அறக்கட்டளை நிறுவினார் முன்னாள் முதல்வர் கருணாநிதி. அதன் அடிப்படையில் இந்த விருது வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.