சினிமா நூற்றாண்டு விழாவில் தமிழ் பத்திரிகையாளர்கள் புறக்கணிப்பா?
சென்னை: இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவில் தமிழ் பத்திரிகையாளர்கள் புறக்கணிக்கப்படுவதாக கூறப்படுகிறது. பிற மொழி பத்திரிக்கையாளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் பத்திரிக்கையாளர்களுக்கு இன்னமும் அடையாள அட்டை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா இன்று தொடங்கி வரும் செவ்வாய்க்கிழமை வரை சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கில் நடை பெறுகிறது. இந்த விழாவை, இன்று மாலை 4 மணிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்.
இந்த விழாவில் வீடியோ மற்றும் இணையதளங்களுக்கு அனுமதி கிடையாது என முதலில் சினிமாத் துறையினர் கூறினர். இப்போது புகைப்படக்காரர்களுக்கும் அனுமதியில்லை என்று சொல்லியிருக்கின்றனர்.
விழாவில் கலந்து கொண்டு செய்தி சேகரிக்க மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு பத்திரிகையாளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு விட்டது. ஆனால், கடந்த 2 நாட்களுக்கு முன்பே தமிழ் பத்திரிகையாளர்களிடம் அடையாள அட்டைகளுக்காக புகைப்படங்கள் வாங்கியும் இன்னும் அடையாள அட்டை வழங்கப்படவில்லை.
இந்த செயல் தமிழ் பத்திரிகையாளர்களை ஒட்டு மொத்தமாக புறக்கணித்திருப்பதாகவே கூறப்படுகிறது. விழா தொடங்க உள்ள நிலையில், தமிழ் பத்திரிகையாளர்களுக்கு அடையாள அட்டையை திரையுலகம் வழங்குமா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.