3-வது நாளாக தொடரும் தியேட்டர்கள் ஸ்ட்ரைக்.. செய்தித்தாள்களில் நிறுத்தப்பட்ட சினிமா விளம்பரங்கள்!
தமிழகத்தில் தியேட்டர்கள் வேலைநிறுத்தம் இன்றும் மூன்றாவது நாளாக நீடிக்கிறது.
சென்னை: கேளிக்கை வரியை ரத்த செய்யக்கோரி தமிழகத்தில் மூன்றாவது நாளாக தியேட்டர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் செய்தித்தாள்களில் சினிமா விளம்பரங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
கடந்த ஒன்றாம் தேதி முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி சட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதற்கு தீப்பெட்டி மற்றும் பட்டாசு ஆலை உற்பத்தியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சினிமாத் துறைக்கு மட்டும் விதிக்கப்பட்டுள்ள இரட்டை வரி முறையை ரத்து செய்யக்கோரி திரையரங்கு உரிமையாளர்கள் கடந்த திங்கள் கிழமை வேலைநிறுத்தத்தை தொடங்கினர். அவர்களிள் வேலை நிறுத்தம் மூன்றாவது நாளாக இன்றும் நீடிக்கிறது.
இதனால் மால்கள் மற்றும் திரையரங்குகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. வேலை நிறுத்தம் காரணமாக திரையரங்குகளுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் தியேட்டர்கள் வேலை நிறுத்தம் காரணமாக செய்தித்தாள்களில் சினிமா விளம்பரங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. திரையரங்குகளில் ஓடும் படங்கள் மற்றும் திரைக்கு வரவுள்ள படங்கள் குறித்த எந்த விளம்பரங்களும் செய்தித்தாள்களில் இடம் பெறவில்லை.