ரூ7.5 கோடி பண மோசடி... மோடியின் பெயரால் மிரட்டும் பச்சமுத்து.. போலீசில் பைனான்சியர் புகார்
சென்னை: 'மொட்ட சிவா கெட்ட சிவா' பட தயாரிப்புக்காக கடனாக கொடுத்த ரூ7.5 கோடியை எஸ்.ஆர்.எம். குழும அதிபர் பச்சமுத்து மோசடி செய்துவிட்டதாக சென்னை போலீசில் பைனான்சியர் முகுல்சந்த் போத்ரா புகார் கூறியுள்ளார். பணத்தை திருப்பிகேட்டபோது பிரதமர் மோடியை தமக்கு தெரியும் என கூறி பச்சமுத்து மிரட்டுவதாகவும் போத்ரா புகாரில் கூறியுள்ளார்.
சென்னை செய்தியாளர்களிடம் பைனான்சியர் முகுல்சந்த் போத்ரா நேற்று கூறியதாவது:
25 ஆண்டுகளுக்கு முன்பு சைக்கிளில் சென்ற பச்சமுத்து இன்று பாரிவேந்தராக அசுர வளர்ச்சி அடைந்துள்ளார். ஆரம்பத்தில் எங்களிடம் ரூ.1 லட்சம் கடன் வாங்குவார். அதை மாதம் ரூ.20 ஆயிரம் என 5 மாதங்களில் அடைப்பார்.
அப்படி இருந்தவர் நேர்மையாக இவ்வளவு குறுகிய நாளில் வளர்வதற்கு வாய்ப்பே இல்லை. இப்போது அவரது வேந்தர் மூவிஸ் நிறுவனம் தயாரித்த மொட்ட சிவா கெட்ட சிவா என்ற திரைப்படம் தயாரிக்க ரூ7.5 கோடி ரூபாய் பணத்தை பச்சமுத்து வாங்கினார்.
இந்த பணத்தை வாங்கும்போது, 'மதன் எனது பையன் மாதிரி. அவர்தான் அனைத்தையும் கவனித்து கொள்கிறார். அவர் நல்லவர், ஒழுக்கமானவர்' என்று அவரை பச்சமுத்து புகழ்ந்தார். பச்சமுத்து கொடுத்த உத்தரவாதத்தின் பேரில்தான் இந்த பணத்தை அவரது முன்னிலையில் மதனிடம் கொடுத்தேன்.
தற்போது அந்த பணத்தை திருப்பிக்கேட்ட போது, ஒரு கோடி ரூபாய்க்கான செக் கொடுத்தனர். மீதி பணத்தை 3 மாதத்தில் செட்டில் செய்வதாக கூறினர். ஆனால், ஒரு கோடிக்கான செக்கும் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்துள்ளது.
அது சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். அதனால், என்னை கடந்த 2 நாட்களாக பச்சமுத்துவின் ஆட்கள் வீட்டுக்கு நேரில் வந்து வழக்கை வாபஸ் பெற சொல்லி மிரட்டுகின்றனர். பச்சமுத்துக்கு பல அதிகாரிகளை தெரியும். அதனால், ரெய்டில் சிக்கிக் கொள்வீர்கள். பல வழக்குகள் போட்டு விடுவோம். ஆகையால் உடனடியாக இந்த செக் மோசடி வழக்கை திரும்ப பெற வேண்டும் என்று மிரட்டுகின்றனர்.
இந்த மோசடி விவகாரத்தில் மதன் ஒரு கருவிதான். மதனை முன்னிலைப்படுத்தி பச்சமுத்து நடத்தும் நாடகம்தான் இது. எனவே, பச்சமுத்துவை பிடித்து விசாரித்தால் மதன் எங்கே இருக்கிறார். உயிரோடு இருக்கிறாரா, இல்லையா? என்பது தெரிய வரும். மேலும் பண மோசடிக்கு உண்மையான காரணம் என்ன என்பது தெரிந்து விடும்.
பச்சமுத்துவை கைது செய்து விசாரித்தால்தான் பணத்தை திரும்ப பெற முடியும். ஆனால், போலீசார் பச்சமுத்துவை விசாரிக்க மறுக்கிறார்கள். அதனால்தான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன்.
எம்பிபிஎஸ் சீட் வாங்கி தருவதாக கூறி 104 மாணவர்களிடம் பணம் பெற்று இருக்கிறார்கள். அந்த மாணவர்களின் எம்பிபிஎஸ் கனவெல்லாம் தகர்ந்து விட்டது. அவர்கள் இப்போது பணம் கிடைத்தால் போதும் என்று பரிதவித்துக் கொண்டிருக்கின்றனர். பாதிக்கப்பட்ட மாணவர்களின் பாவம் பச்சமுத்துவை சும்மா விடுமா?.
இப்படி ஏமாற்றி பெறப்பட்ட பணம் எல்லாம், ஆந்திர மாநிலம் அமராவதியில் பச்சமுத்து கட்டி வரும் கல்லூரிக்கு அனுப்பி விட்டனர். மதன் தலைமறைவாகிவிட்டாரா அல்லது தலைமறைவாக்கப்பட்டாரா என்பது யாருக்கும் தெரியவில்லை. அடுத்த 5 ஆண்டுகளாக மதனை பற்றிய தகவல் தெரியாமல் போனால் இந்த வழக்கு நிலைமை என்ன ஆகும்.
மதனை முன்னிலைப்படுத்தி பணத்தை வாங்கிய பச்சமுத்து இப்போது அதுபற்றி எனக்கு தெரியாது என்கிறார். பிரதமர் மோடியை எனக்கு தெரியும் என சொல்லும் பச்சமுத்துவுக்கு, மோடி ஒருபோதும் துணை போக மாட்டார். என்னை பயமுறுத்துவதை விட்டுவிட்டு சட்டத்தின் மூலம் எனது வழக்கை பச்சமுத்து சந்திக்க வேண்டும்.
பச்சமுத்து நடத்தும் கல்லூரியை அரசே எடுத்து நடத்த வேண்டும் என்று நீதிமன்றத்தில் விரைவில் வழக்கு தொடர உள்ளேன்.
இவ்வாறு முகுல்சந்த் போத்ரா கூறினார்.