அப்படி ஓரமாப் போய் விளையாடனும்.. சினிமாக்காரர்களை ஒதுக்கி ஓரம் கட்டிய இளைஞர் பட்டாளம்!
சென்னை: தமிழக இளைஞர் சமுதாயத்தின் மிகப் பெரிய புரட்சி வெற்றிகளில் ஒன்று சினிமாக்காரர்களை ஒதுக்கி முக்கியத்துவம் இழக்க வைத்தது. இதை தமிழ்ச் சமுதாயத்திற்கு இந்த இளைஞர் பட்டாளம் வாங்கிக் கொடுத்த மிகப் பெரிய விடுதலை என்று கூட கூறலாம்.
காலம் காலமாக சினிமாக்காரர்கள் மீது பாய்ச்சிக் கொண்டிருந்த வெளிச்சத்தை முற்றிலுமாக பிடுங்கிப் போட்டு விட்டனர் இந்த இளைஞர் படையினர். இன்று நடந்த தென்னிந்திய (தமிழ் நடிகர்கள் சங்கம் என பெயர் வைக்க முடியாது என்று திமிர்வாதம் பேசி வருபவர்கள் இவர்கள்) நடிகர் சங்கத்தினரின் ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டத்தை உண்மையிலேயே யாரும் கண்டு கொள்ளவே இல்லை.
சமூக வலைதளங்களில் இவர்களை விமர்சித்துதான் கருத்துக்கள் வருகின்றனவே தவிர யாருமே இவர்களை ஆதரிக்கவில்லை. கண்டு கொள்ளவும் இல்லை.
இவ்வளவு நாள் கண்டுக்காம இருந்துட்டு இப்போ போராட்டம் வலுத்ததும் களத்தில் #நடிக்க தயாராகும் நடிகர் சங்க போராட்டத்தை புறக்கணிப்போம்#JalliKattu pic.twitter.com/gOVBekmPTe
— Archana (@ArchanaArchuu) January 19, 2017
இதற்குக் காரணம் இருக்கிறது. ஜல்லிக்கட்டு தொடர்பாக விஷால், திரிஷா போன்றோர் தெரிவித்த கருத்துக்கள், அவர்களின் பேச்சுக்களை மக்கள் மறக்கத் தயாராக இல்லை. அதிலும் இளைஞர் படையினர் இவர்களை மன்னிக்க தயாராக இல்லை. அதனால்தான் ஒட்டுமொத்தாக அவர்களை புறக்கணித்து தூக்கிப் போட்டு விட்டனர். இதை உணர்ந்துதான் எங்களைக் கவர் செய்ய வேண்டாம் என்று நடிகர் சங்கமே சொல்லி விட்டு கப்சிப்பாகி விட்டது.
நடிகர் சங்கத்தின் முந்தைய நிர்வாகிகளாவது பரவாயில்லை. ஏதாவது பேசியுள்ளனர். ஆனால் விஷால் தலைமையிலான அணி வந்த பிறகு தமிழகத்தின் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் குரல் கொடுக்க மாட்டோம் என்று பெரும் ஆணவத்தோடுதான் பேசி வருகின்றனர். காவிரிப் பிரச்சினையாக இருந்தாலும் சரி, வேறு எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் சரி பிடிவாதப் பேச்சுதான்.
அதை விடக் கொடுமை, ஆர்யா பேசிய திமிர்ப் பேச்சு. ஜல்லிக்கட்டுன்னா என்ன என்று அவர் கேட்டது அத்தனை தமிழர்களின் ரத்தத்தையும் கொதிக்க வைத்து விட்டது. பாலா போன்றோர் எப்படி இப்படிப்பட்டவர்களையெல்லாம் வளர்த்து விட்டனர் என்பதுதான் பெரும் ஆச்சரியமாக உள்ளது.
மொத்தத்தில் மக்கள் மத்தியில் சினிமா நடிகர்கள் மீதான மோகத்தை அடியோடு சாய்த்து அழித்துப் போட்டுள்ளனர் இளம் தலைமுறை தமிழர்கள். இது தொடர வேண்டும்.. மீண்டும் அடிமைத்தளைக்குள் போய் விடாமல் சுதாரிப்பாக இருக்க வேண்டியது மக்களின் கடமை. அப்போதுதான் இந்த இளம் படையின் போராட்டத்துக்கு பலன் இருக்கும்.
கைதட்டுங்க ஆனா சத்தம் வராம தட்டுங்கனு,நடிகர் சங்கத்த இப்டி ஓரமா நிக்க வச்சுருக்கறதையும் பயலுகளோட வெற்றிகள்ல ஒண்ணா சேத்துக்கலாம்ல :)
— J P :-} (@nanbanjei) January 20, 2017
உண்மையில் இந்த ட்வீட்தான் நடிகர்களின் போராட்டத்திற்குக் கிடைத்துள்ள "வரவேற்பு"க்கு கிடைத்துள்ள சரியான பதிலாகும்.