சிப்பெட்டை டெல்லிக்கு மாற்ற துடிக்கும் பாஜக அனந்தகுமாரின் உள்நோக்கம் என்ன? திருமாவளவன் கேள்வி
சென்னை: சிப்பெட் நிறுவனத்தின் தலைமையகத்தை டெல்லிக்கு மாற்றும் மத்திய அரசின் முடிவிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனங்களில் ஒன்றிரண்டு மட்டுமே தமிழகத்தில் தலைமையகத்தை கொண்டுள்ளன. குறிப்பாக மத்திய பிளாஸ்டிக் பொறியியல் தொழில்நுட்ப நிறுவனமும், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனமும் சென்னையில் தலைமையகத்தை கொண்டு இயங்கி வருகின்றன. இவற்றில் பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமையகத்தை புதுதில்லிக்கு மாற்றிட மைய அரசு முடிவு செய்துள்ளது.
இன்னும் ஒருசில வாரங்களில் அதனை மாற்றுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. இந்த நிறுவனத்தில் தமிழகத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமின்றி அகில இந்திய அளவில் பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த மாணவர்கள் கல்வியும் வேலைவாய்ப்பும் பெற்று வருகின்றனர். நட்டமில்லாமல் நலிவடையாமல் வெற்றிகரமாக இயங்கி வரும் இந்த நிறுவனத்தை புதுதில்லிக்கு மாற்ற வேண்டும் என்று முயற்சிப்பது ஏனென்று விளங்கவில்லை.
1999ஆம் ஆண்டு இதே போன்று மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டது. தற்போது மீண்டும் அந்த முயற்சியில் மைய அரசு இறங்கியிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியதாகும். இந்திய அரசு நிறுவனமென்றால் அதன் தலைமையகம் புதுதில்லியிலோ அல்லது வடஇந்திய பகுதிகளிலோ மட்டுமே இருக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏதும் உள்ளதா? சென்னையில் இயங்கினாலும் பெரும்பாலும் வடஇந்திய மாநிலங்களைச் சார்ந்தவர்களே அதன் தலைமை பொறுப்பில் இடம்பெறுகின்றனர். எனினும் தமிழகத்தைச் சார்ந்தவர்கள் தான் தலைமைப் பொறுப்புக்கு வரவேண்டும் என்று யாரும் வலியுறுத்தியதில்லை.
இந்நிலையில் அதன் தலைமையகத்தை தமிழ்நாட்டிலிருந்து அப்புறப்படுத்துவதன் உள்நோக்கம் என்ன? குறிப்பாக வேதிப்பொருள்கள் மற்றும் உரத்துறையைச் சார்ந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் அவர்கள் இதில் ஆர்வம் காட்டுவதன் நோக்கம் என்ன? சுமார் அரை நூற்றாண்டு காலமாக வெற்றிகரமாக இயங்கி வரும் இந்நிறுவனத்தை தமிழகத்திலிருந்து அப்புறப்படுத்த முயற்சிக்கும் போக்கை மைய அரசு உடனடியாக கைவிட வேண்டும். அதற்கான அரசாணையை திரும்பபெற வேண்டும். சென்னையிலேயே தொடர்ந்து இயங்குவதற்கும் மேலும் அதனை விரிவாக்கம் செய்வதற்கும் மைய அரசு முன்வரவேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வற்புறுத்தி கேட்டுக்கொள்கிறது என்று திருமாவளவன் கூறியுள்ளார்.